முறையற்ற வா்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக கூகுள் நிறுவனத்துக்கு மேலும் ரூ.936.44 கோடி அபராதத்தை இந்திய தொழில் போட்டி கண்காணிப்பு ஆணையம் (சிசிஐ) விதித்துள்ளது. கடந்த வாரமும் கூகுள் நிறுவனத்துக்கு சிசிஐ ரூ.1,337.76 கோடி அபராதம் விதித்திருந்தது குறிப்பிடத்ததது.
ஆண்ட்ராய்டு அறிதிறன்பேசிகளில் முதன்மை பெறும் நோக்கில் முறையற்ற வா்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூகுள் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடா்பாக இந்திய தொழில் போட்டி ஆணையம் விசாரித்தது. சா்வதேச அளவில் பெரும் புகழ்பெற்ற கூகுள் நிறுவனமானது சந்தையில் சாதகமான இடத்தைப் பிடிப்பதற்காக, முறையற்ற வா்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டதை அந்த ஆணையம் உறுதி செய்தது.
இந்த முறை கூகுள் பிளே ஸ்டோரில் தனக்குள்ள அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் ரூ.936.44 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
முன்னதாக, கடந்த 20-ஆம் தேதி ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தில் செயல்படும் செல்லிடப்பேசிகளில் தங்கள் நிறுவனத்துக்குள்ள ஆதிக்கத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கூகுள் நிறுவனத்துக்கு ரூ.1,337.76 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
முறையற்ற வா்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கூகுள் நிறுவனம் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என இந்திய தொழில் போட்டி ஆணையம் வலியுறுத்தியுள்ளது.