தென் கொரியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் வலைதளத்தில் சர்ச்சைக்குரிய காணொலி ஒன்றினைப் பகிர்ந்தது. அதில் ஹமாஸ் அமைப்பினர் தென்கொரியாவைத் தாக்குவது போன்ற காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருந்தன.
அந்தக் காணொலியில், சியோல் பகுதியில் கொரியப் பெண் ஒருவர், ஆயுதம் ஏந்திய ஹமாஸ் அமைப்பினரால் தனது மகளிடமிருந்து பிரிக்கப்பட்டு கடத்திச் செல்லப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இந்தக் காணொலியோடு 'அக்டோபர் 7-ல் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 240 பேர் கடத்திச் செல்லப்பட்டனர். இது உங்கள் நாட்டிற்கு நடந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என யோசித்துப்பாருங்கள்' என்ற வசனங்கள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: போரினால் கேள்விக்குறியாகும் வீரர்களின் வாழ்வு...
இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட இஸ்ரேலிய தூதர் அகிவா டோர், 'தென் கொரிய மக்களுக்கு போரின் தற்போதைய நிலவரங்கள் தெரிய வேண்டும் என்பதற்காகவே இஸ்ரேலில் நடந்த பயங்கரத் தாக்குதலை இங்கு நடப்பதுபோல மறு உருவாக்கம் செய்தோம்' எனத் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவும் பின் நீக்கப்பட்டுள்ளது.
'இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை நியாயப்படுத்த முடியாது. ஆனால் மற்றொரு நாட்டின் பாதுகாப்பு நிலவரத்தை தென் கொரியாவின் பாதுகாப்போடு ஒப்பிடுவது நாட்டு மக்களிடையே பயத்தை ஏற்படுத்தக்கூடும்.
எனவே காணொலியை நீக்கும்படி வலியுறுத்தியதனடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன' என தென்கொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: காஸாவில் தரைவழித் தாக்குதல் விரிவாக்கம்: இஸ்ரேல்
காஸா சுகாதார அமைச்சகம் அளித்த தகவல்படி தொடர் வான் மற்றும் தரை வழித் தாக்குதல்களால் இதுவரை 21,110 பேரை இஸ்ரேல் கொன்றுள்ளது. பல்வேறு நாடுகள், போரை நிறுத்தும்படி வலியுறுத்திவரும் நிலையில் தென் கொரியாவில் தனக்கு சாதகமான காணொலியைப் பரப்பி சர்ச்சையில் சிக்கியுள்ளது இஸ்ரேல்.