மதம் தொடர்பான ஆட்சேபத்திற்குரிய கருத்துகளை நீக்கததற்காக விதிக்கப்பட்ட விக்கிபீடியா மீதான முடக்கத்தை பாகிஸ்தான் அரசு திரும்பப் பெற்றது.
விக்கிபீடியா உலகம் முழுவதும் அறியப்படும் இணையதள தகவல்தளமாக இருக்கிறது. பல்வேறு நாடுகளின் பயனர்களும் இந்த தளத்தின் மூலம் தங்களது தேவையாக தகவல்களைப் பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்த தளத்தில் அறிவியல், கலை, இலக்கியம், பொருளாதாரம், மருத்துவம், கல்வி, பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின்கீழ் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.
இஸ்லாம் மத நடவடிக்கைகளுக்கு எதிரான கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கான தண்டனைகளை கடுமையாக்கியுள்ள பாகிஸ்தான் அரசு பல்வேறு இணைய நிறுவனங்களுக்கும் இதுதொடர்பாக அறிவுறுத்தல் வழங்கியது. அதனைத் தொடர்ந்து விக்கிபீடியா இணையதளத்தில் இஸ்லாம் மதம் தொடர்பான கருத்தை 48 மணிநேரத்திற்குள் நீக்க பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்பத்துறை உத்தரவிட்டிருந்தது.
பாகிஸ்தானின் அறிவுறுத்தலை விக்கிபீடியா ஏற்க மறுத்ததால் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அந்தத் தளத்தை பாகிஸ்தான் அரசு முடக்கியது.
பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு கடுமையான எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து இதுதொடர்பாக ஆராய 5 பேர் கொண்ட குழுவை அமைக்க பிரதமர் ஷாபாஸ் ஷெரீபு உத்தரவிட்டார்.
இந்நிலையில் விக்கிபீடியா மீதான முடக்கத்தை பிரதமர் ஷாபாஸ் ஷெரீபு திரும்பப் பெற உத்தரவிட்டதைத் தொடர்ந்து தடை முடக்கம் முடிவுக்கு வந்தது.
இந்தத் தகவலை பாகிஸ்தான் தகவல் மற்றும் செய்தி தொடர்புத்துறை அமைச்சர் மரியும் ஒளரங்கசீப் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு விக்கிபீடியா நிறுவனம் வரவேற்பு தெரிவித்துள்ளது.