சர்வதேசளவில் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகிற போர் நிறுத்தக் கோரிக்கையை இஸ்ரேல் மறுத்துள்ளது.
காஸாவின் மருத்துவமனைகளைக் குறி வைத்து தாக்குவதாக இஸ்ரேல் ராணுவம் மீது குற்றம் சாட்டப்படுகிறது.
மத்திய காஸாவில் உள்ல அல்-ஷிபா மருத்துவமனைக்கு அருகே தொடர்ச்சியாக இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் சண்டை நிலவி வருகிறது.
இடைவிடாத துப்பாக்கிச்சூடுகள் கேட்கிற வேளையில் மருத்துவமனை வளாகத்தில் நடமாட்டம் தென்பட்டால் இஸ்ரேல் ராணுவத்தினர் சுடத் தொடங்கின்றனர்.
மருத்துவமனையின் மின் உற்பத்தி இயந்திரங்கள் எரிபொருள் இல்லாததால் செயலிழந்துவிட்டன.
இந்த நிலையில் இருளிலும் எப்போது வேண்டுமானாலும் தாக்கப்படுவோம் என்கிற அச்சத்திலும் மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள், நோயாளிகள், தஞ்சமடைந்திருக்கும் அகதிகள் ஆகியோர் அச்சத்தில் உள்ளனர். 18000 முதல் 23000 பேர் வரை மருத்துவமனையில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.
37 பிறந்த குழந்தைகள் உள்பட சிகிச்சை அளிக்க வாய்ப்பின்றி மருத்துவமனையில் சிக்கியுள்ளனர்.
போர் நிறுத்தக் கோரிக்கை
சர்வதேச நாடுகள் பலவற்றிலிருந்தும் இஸ்ரேலுக்குப் போர் நிறுத்தத்திற்கான அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
ஆறு வாரங்களாகத் தொடர்ந்து வரும் போரில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
பாரிஸ் அமைதி மாநாடுக்கு பிறகு பிரான்ஸ் அதிபர் மேக்ரான், இஸ்ரேலிடம் போர் நிறுத்தக் கோரிக்கையை முன்வைத்தார். இது இஸ்ரேலின் எதிர்காலத்திற்கும் நல்லத்தில்லை எனத் தெரிவித்திருந்தார்.
57 இஸ்லாமிய மற்றும் அரபு நாடுகளின் தலைவர்கள் செளதி அரேபியாவில் சந்தித்து, போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்தியுள்ளனர்.
லண்டனில் 3 லட்சம் பாலஸ்தீன ஆதரவாளர்கள் அமைதியான முறையில் போர் நிறுத்தம் கோரிப் பேரணி நடத்தியுள்ளனர்.
இதையும் படிக்க: மனிதம் எங்கே போனது
இஸ்ரேலின் மறுப்பு
இந்த நிலையில் நேற்று (நவ.10) இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு பேசும்போது, ஹமாஸ், பிணைக்கைதிகள் 240 பேரையும் விடுவிக்கும் வரை போர் நிறுத்தம் என்கிற பேச்சுக்கே இடமில்லை எனத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
அமெரிக்கா சார்பில் முன்மொழியப்பட்ட நாள்தோறும் நான்கு மணி நேர போர் இடைவெளி நேரத்திற்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டாலும் தாக்குதல் முழுவதுமாக நிறுத்தப்படவில்லை.
வடக்கு காஸாவில் இருந்து தெற்கு நோக்கி செல்லும் சாலையோரங்களில் மட்டும் தாக்குதல் நடத்தப்படுவதில்லை.
மற்ற இடங்களில் குறிப்பாக ஹமாஸின் புகலிடமாக இஸ்ரேல் சந்தேகிக்கும் இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.