ரஷியாவில் தங்கச் சுரங்கத்தில் விபத்து: 12 தொழிலாளர்கள் பலி
கிழக்கு ரஷியாவின் ஸெய்ன்ஸ்க் மாவட்டத்தில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் சுரங்கத்தில் கடந்த மாதம் 18-ஆம் தேதி திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த விபத்தில் சுரங்கப் பணியாளர்கள் பலர் சுரங்கத்தினுள் சிக்கிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து சுரங்கத்திலிருந்து தொழிலாளர்களை பத்திரமாக மீட்கும் பணி கடந்த 2 வாரங்களாக தீவிரமாக நடைபெற்று வந்தது.
சுமார் 125 மீட்டர் ஆழ சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்களை மீட்கும் பணியில், 200க்கும் மேற்பட்ட மீட்புக்குழுவினர் ஈடுபட்டிருந்தனர். சுரங்கத்தைச் சுற்றி வெள்ள நீர் புகுந்ததால் தொழிலாளர்களை பத்திரமாக மீட்பது, மீட்புக் குழுவினருக்கு கடும் சவாலாக அமைந்தது. அதிக திறன் வாய்ந்த மோட்டார் பம்ப்புகள் பயன்படுத்தப்பட்டு சுரங்கத்திலிருந்து நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், சுரங்கத்தை சூழ்ந்திருக்கும் நீரை முழுமையாக வெளியேற்ற முடியவில்லை என தெரிவித்துள்ள மீட்புக் குழுவினர், சுரங்கத்தின் பிற பகுதிகளும் இடிந்து விழும் அபாயம் இருப்பதாய் தெரிவித்தனர். இதையடுத்து சுரங்கத்தினுள் சிக்கிக்கொண்ட பணியாளர்கள் 13 பேர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்பதால் கடந்த 2 வாரங்களாக தீவிரமாக நடைபெற்று வந்த மீட்புப்பணி நிறைவு பெற்றுள்ளதாகவும், சுரங்கத்தினுள் சிக்கிக்கொண்ட பணியாளர்கள் 13 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கப்படுமென சுரங்க நிர்வாகம் அறிவித்துள்ளது.