அமெரிக்காவில் சமீர் கமாத் என்ற 23 வயது இந்திய மாணவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
புர்துவே பல்கலைக்கழகத்தில் பயின்றுவந்த சமீர் கமாத், நிச்சஸ் லேண்ட் டிரஸ் பகுதியில் திங்கள்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ன.
இந்த ஆண்டில், இந்திய மாணவர் மரணமடைவது இது ஐந்தாவது சம்பவம் என்று கூறப்படுகிறது. இந்தியானா புர்துவே பல்கலைக்கழகத்தில் படித்து வந்துள்ளார். இவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்றும், 2023ஆம் ஆண்டு மெக்கானிக்கல் பொறியியல் பட்டம் பெற்று, 2025ஆம் ஆண்டு முதுகலைப் பட்டத்தைப் பெற திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இவரது உடல் கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. உடல் கூறாய்வு முடிவுகள் வெளியான பிறகே இவரது மரணத்துக்கான காரணம் தெரிய வரும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க.. பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு அறிமுகம்?: மத்திய அரசு பதில்
புர்துவே பல்கலைக்கழகத்தில் படித்து வந்த நீல் ஆச்சார்யா மரணமடைந்த அடுத்த நாளே, மற்றொரு இந்திய மாணவரின் மரணச் செய்தி வெளியாகியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நீல் ஆச்சார்யாவின் உடல் கல்லூரி வளாகத்துக்கு அருகே கண்டெடுக்கப்பட்டது.
கடந்த வாரம் 19 வயதான ஷ்ரேயாஸ் ரெட்டி, ஓஹியோவில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இதில், கொலைச் சதி இருக்கிறதா என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். முன்பு, ஜனவரி 16ஆம் தேதி விவேக் சைனி என்ற மாணவர் வீட்டில்லாமல் தெருவில் வசித்து வந்த நபரால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
தொடர்ந்து அமெரிக்காவில் இந்திய மாணவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருவது மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் கடும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கனவே சொந்த நாட்டைவிட்டுப் பிரிந்து வெளிநாட்டில் தங்கிப் படித்து வரும் லட்சக்கணக்கான இந்திய மாணவர்கள் பல்வேறு மன அழுத்தங்களுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், தற்போது இந்த தொடர் தாக்குதல் சம்பவங்கள் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதால், உடனடியாக அமெரிக்க அரசு இதில் தலையிட்டு, இந்திய மாணவர்களுக்கு எதிரானத் தாக்குதல்களைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பெற்றோர் வலியுறுத்திவருகிறார்கள்.