யேமன் நாட்டைச் சேர்ந்த ஹூதிக்கள் கிளர்ச்சிப் படையினர் புதன்கிழமை ஏடன் வளைகுடா பகுதியில் சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் கப்பல் பணியாளர்கள் மூவர் பலியானதாகவும் உயிர் பிழைத்தவர்கள் கப்பலை விடுத்து தப்பிக்க வேண்டியிருந்ததாகவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
அக்.7 ஹமாஸ்- இஸ்ரேல் போர் தொடங்கியது முதல் ஈரான் ஆதரவு கிளர்ச்சிப் படையான ஹூதிக்கள் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவற்றில் புதன்கிழமை நிகழ்த்தியது மிகவும் அபாயகரமானதாக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
மூவர் உயிரிழப்பு மட்டுமின்றி நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டதாகவும் மூவர் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்தது.
லைபீரியாவைச் சேர்ந்த ட்ரூ கான்பிடன்ஸ் என்கிற இந்த கப்பல் மத்திய கிழக்கு பிராந்தியம் முதல் ஐரோப்பா வரை சரக்கு ஏற்றிச் செல்லக்கூடியது.
ஹூதிக்களின் தாக்குதல் உலக வணிகத்தை பாதிப்பதுடன் கப்பல்சார் துறையில் பணியில் இருப்பவர்கள் தாக்கப்படுவது மோசமானது என அமெரிக்க கட்டளையகம் விமர்சித்துள்ளது.
ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு சரக்கு கப்பலை கைவிட்டு கப்பல் பணியாளர்கள் அவசர படகு மூலம் தப்பித்தனர். அமெரிக்க மற்றும் இந்திய கடற்படை அவர்களுக்கு உதவியது.
இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா தக்க பதிலடி கொடுக்கும் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் தெரிவித்தார்.