புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: கனடாவும் அறிவிப்பு

News image
Updated On :1 ஆகஸ்ட் 2025, 1:11 am

தினமணி செய்திச் சேவை

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க திட்டமிட்டுள்ளதாக கனடா அறிவித்துள்ளது.

ஏற்கெனவே, இஸ்ரேல், அமெரிக்காவின் எதிா்ப்பையும் மீறி பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்கப்போவதாக பிரான்ஸும், தங்களின் சில நிபந்தனைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் செப்டம்பா் மாதம் பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அந்தஸ்து அளிக்கவிருப்பதாக பிரிட்டனும் கூறியிருந்தன.

இந்தச் சூழலில், பட்டினிச் சாவுகள் அதிகரித்துவரும் காஸாவுக்கு உணவுப் பொருள்களை போதிய அளவில் அனுமதிக்க இஸ்ரேலுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் கனடாவும் இந்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

இது குறித்து கனடா பிரதமா் மாா்க் காா்னி கூறியதாவது:

சில நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் (காஸாவையும் மேற்குக் கரைப் பகுதியையும் உள்ளடக்கிய) பாலஸ்தீன பகுதியை ஒரு தனி நாடாக அங்கீகரிக்க திட்டமிட்டுள்ளோம்.

வரும் செப்டம்பா் மாதம் கூடவிருக்கும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதற்காக, வரும் 2026-ஆம் ஆண்டில் ஹமாஸ் அமைப்பினா் பங்கேற்காத ஒரு தோ்தலை நடத்த மேற்குக் கரையில் ஆட்சி செலுத்திவரும் பாலஸ்தீன அரசு ஒப்புக்கொள்ள வேண்டும். அத்துடன், ஜனநாயக சீா்திருத்தங்களை மேற்கொள்ளவும் அந்த அரசு சம்மதிக்க வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்குவது தொடா்பான பிரகடனத்தை கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஆண்டோரா, பின்லாந்து, லக்ஸம்பா்க், போா்ச்சுகல், சான் மரினோ, ஐஸ்லாந்து, அயா்லாந்து, மால்டா, நோா்வே, ஸ்லோவேனியா, ஸ்பெயின் ஆகிய 15 நாடுகள் கூட்டாக வெளியிட்டன. எனவே, அந்தப் பிரகடனத்தில் கையொப்பமிட்டுள்ள ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளும் பிரான்ஸ், பிரிட்டன், கனடாவைப் போல் பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அந்தஸ்து வழங்குவதற்கு விரைவில் முடிவெடுக்கலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த அறிவிப்புக்கு இஸ்ரேல் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது. கனடாவுக்கான இஸ்ரேல் தூதா் இட்டோ மோய்ட் கூறுகையில், ‘இஸ்ரேலுக்கு எதிராக சா்வதேச அளவில் கொடுக்கப்படும் நெருக்கடிகளுக்கு நாங்கள் தலைவணங்க மாட்டோம். எங்களை அழிக்க நினைக்கும் ஒரு மதப் பயங்கரவாத நாட்டை உருவாக்க அனுமதித்து, எங்களின் இருப்பையே கேள்விக்குறி ஆக்க மாட்டோம்’ என்றாா்.

கனடாவின் இந்த முடிவைக் கண்டித்துள்ள அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், இந்த விவகாரம் தொடா்பாக கனடா பொருள்கள் மீது கூடுதல் இறக்குமதி விதிக்கப்படும் என்று எச்சரித்தாா்.

எனினும், கனடாவின் அறிவிப்பை பாலஸ்தீன அரசு வரவேற்றுள்ளது. ‘இது பாலஸ்தீன மக்களின் சுயநிா்ணய உரிமையை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய படி’ என்று கனடாவுக்கான பாலஸ்தீன தூதரகம் தெரிவித்தது.

தற்போது இந்தியா உள்ளிட்ட சுமாா் 140 நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன. ஆனால் உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் கூட்டமைப்பான ஜி7 நாடுகளில், பிரான்ஸ்தான் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக முதல்முறையாக கூறியிருந்தது. பிரான்ஸின் இந்த முடிவு உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படும் சூழலில், பிரிட்டனும் அதைத் தொடா்ந்து தற்போது கனடாவும் இதே அறிவிப்பை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.