
எகிப்து அரசின் எதிர்ப்பை மீறி நைல் நதியில், சர்ச்சைக்குரிய நீர்மின் அணையைக் கட்டிமுடித்துள்ளதாக, எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது அறிவித்துள்ளார்.
எத்தியோப்பியா நாட்டில் நைல் நதியின் மீது, மின்சாரம் உற்பத்தி செய்யும் வசதியுடன் கூடிய அணையைக் கட்ட அந்நாட்டு அரசு நீண்டகாலமாகத் திட்டமிட்டிருந்தது.
”கிராண்ட் எத்தியோப்பியன் ரெனைசான்ஸ் டேம்” என்று அழைக்கப்படும் அந்த அணையால் தங்களுக்கு வழங்கப்படும் நீர்பகிர்வானது பாதிக்கப்படும் எனக் கருதும் எகிப்து அரசு, அதற்கு கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்தது.
இந்நிலையில், தங்களது நாட்டின் வளர்ச்சியாகக் கருதப்படும் அணையைக் கட்டுவதற்கு, மற்றொரு நாட்டின் அனுமதி தேவையில்லை எனக் கூறி, நைல் நதியில், அணைக் கட்டும் பணிகளை கடந்த 2011-ம் ஆண்டு எத்தியோப்பியா அரசு தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து, அணையின் கட்டுமானப் பணிகள் தற்போது முழுவதுமாக நிறைவடைந்ததாகவும், வரும் செப்டம்பர் மாதம் அதிகாரப்பூர்வமாகத் திறப்பு விழா நடைபெறும் எனவும், எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது அறிவித்துள்ளார்.
சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படும், இந்த அணையை மையப்படுத்தி, எத்தியோப்பியா மற்றும் எகிப்து ஆகிய இருநாடுகளும் ஒப்பந்தம் மேற்கொள்ள தொடர்ந்து முயற்சித்து வருகின்றன.
முன்னதாக, சூடான் நாட்டுடனான எல்லையில் அமைந்துள்ள இந்த அணையின் மூலம் கடந்த 2022-ம் ஆண்டு முதல் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தப் புதிய அணையின் மூலம் சுமார் 6,000 மெகாவாட்ஸ் அளவிலான மின்சாரம் உற்பத்தி செய்யப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எத்தியோப்பியாவின் தற்போதைய மின்சார உற்பத்தியை விட இருமடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.