ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

நியூ யார்க் மேயர் தேர்தலில் போட்டியிடும் பிரபல பாலிவுட் இயக்குநரின் மகன்! யார் இவர்?

நியூ யார்க் மேயர் தேர்தலில் போட்டியிடும் ஜோஹ்ரான் மம்தானி பற்றி...

News image

ஜோஹ்ரான் மம்தானி - X / Zohran Mamdani

Updated On :25 ஜூன் 2025, 1:19 pm IST

நியூ யார்க் மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி தேர்வாகியுள்ளார்.

இவர், சலாம் பாம்பே, மான்சூன் வெட்டிங் போன்ற படங்களை இயக்கிய இந்திய - அமெரிக்க இயக்குநரான மிரா நாயரின் மகன் ஆவார்.

வருகின்ற நவம்பர் 4-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த மேயர் தேர்தலில், குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியின்றி கர்டிஸ் ஸ்லிவா தேர்வு செய்யப்பட்டார்.

ஜனநாயகக் கட்சியில் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் இறுதித் தேர்தல் ஜூன் 24 நடைபெற்றது. இந்த தேர்தலில், முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ குவோமோ, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி, பிராட் லேண்டர் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

மொத்தம் 89 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில், அதிகபட்சமாக ஜோஹ்ரான் மம்தானி 44 சதவிகிதமும், குவோமோ 36 சதவிகிதமும் வாக்குகள் பெற்றனர்.

இதையடுத்து, ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கான தேர்தலில் வெற்றி பெற்ற ஜோத்ரான் மம்தானி, ” நீங்கள் எனக்கு வாக்களித்திருந்தாலும், குவோமோவுக்கு வாக்களித்திருந்தாலும், நான் அனைத்து நியூயார்க் மக்களுக்கான மேயராக இருப்பேன். பெருமையுடன் இருக்கும் மேயராக இருக்க உழைப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

யார் இந்த ஜோஹ்ரான் மம்தானி?

உகண்டாவின் கம்பாலாவில் 1991 ஆம் ஆண்டு பிறந்தவர் ஜோஹ்ரான் மம்தானி. சலாம் பாம்பே, மான்சூன் வெட்டிங் போன்ற பிரபல திரைப்படங்களை இயக்கிய மிரா நாயர் இவரது தாயார் ஆவார். தந்தை கல்வியாளர் மஹ்மூத் மம்தானி.

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் குழந்தை பருவத்தை கழித்த ஜோஹ்ரான், 7 வயதில் நியூ யார்க் நகரில் பெற்றோர்களுடன் குடிபெயர்ந்தார்.

போடோயின் கல்லூரியின் இளங்கலைப் பட்டப்படிப்பு பயிலும்போதே ஜோஹ்ரானின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது. பாலஸ்தீன் நீதிக்கான மாணவர்கள் என்ற அமைப்பை நிறுவினார்.

அஸ்டோரியா மற்றும் லாங் தீவு உள்ளிட்ட நகரங்களை உள்ளடக்கிய 36-வது மாவட்டத்தின் பிரதிநிதியாக நியூ யார்க் மாகாண அவைக்கு 2019 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிரியா நாட்டின் கலைஞர் ராமா துவாஜி என்பவரை இந்தாண்டு தொடக்கத்தில் ஜோஹ்ரான் திருமணம் செய்துகொண்டார்.

மலிவு விலை வீடுகள், பொது போக்குவரத்து மற்றும் புலம்பெயர்ந்தோர் உரிமைகள் ஆகியவற்றை தொடர்பாக தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

தனது முற்போக்கு கருத்துகளால் நியூ யார்க் இளைஞர்கள், இடதுசாரி கருத்துடையவர்கள் மத்தியில் ஜோஹ்ரானுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

தற்போது ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், நியூ யார்க் மேயராக ஜோஹ்ரான் தேர்வாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

நியூ யார்க் மேயராக ஜோஹ்ரான் தேர்வானால், முதல் முஸ்லிம் மற்றும் இந்திய - அமெரிக்க மேயர் என்ற வரலாறு உருவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.