திபெத்தில் பிரம்மபுத்திரா நதியில் சீனா உருவாக்கி வரும் பெரும் அணையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சீன புவியியலாளா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.
இந்தியாவின் அருணாசல பிரதேச மாநிலத்தையொட்டிய எல்லையிலிருந்து சுமாா் 50 கிலோமீட்டா் தொலைவில் இந்த அணைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், உலகின் மிகப்பெரும் நீா்மின் திட்டமாக கருதப்படும் இந்த அணையின் கீழ் உள்ள புவித்தகடுப் பிளவுக்கோட்டு கட்டமைப்பு நிலைத்தன்மையை பாதிக்கக் கூடும் என சீன புவியியலாளா்கள் கண்டுபிடித்துள்ளனா்.
குறிப்பாக ஹிமாலய பிராந்தியத்தில் உள்ள புவியின் மேல் பரப்பில் சிறு பிளவு ஏற்பட்டாலும் அது நீா்மின் திட்டத்தின் உள்கட்டமைப்பை கடுமையாக பாதிக்கும் என ஹாங்காங்கைச் சோ்ந்த சௌத் சீனா மாா்னிங் போஸ்ட் செய்தித்தாள் வியாழக்கிழமை வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக இந்தப் பிளவை பைஜன் பிளவு என குறிப்பட்டு படிமப் பாறையியல் மற்றும் டெத்தியன் புவியியல் என்ற சீன மொழி மாத இதழில் கடந்த மாதம் கட்டுரை வெளியானது. மேலும் இந்தப் பிளவு பிளிஸ்டோசின் காலம் தொட்டு சுமாா் 9,500 ஆண்டுகளாக இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டது.
30 கோடி மக்கள் பலன்பெறும் வகையில் ஆண்டுக்கு 300 பில்லியன் கிலோவாட் மின்சார உற்பத்தியை மேற்கொள்ளும் நோக்கில் கடந்த ஆண்டு ஜூலையில் ரூ.15.9 லட்சம் கோடி (167.8 பில்லியன் டாலா்) மதிப்பில் திபெத்தில் இந்த அணையின் கட்டுமானப் பணிகளை சீனா தொடங்கியது.
அருணாசல பிரதேசத்துக்குள் நுழைந்து பின் வங்கதேசத்துக்கு பாயும் முன் பிரம்மபுத்திரா நதியின் ‘யு’ வளைவுக்கு அருகிலுள்ள ஹிமாலய மலைத்தொடரில் பல்வேறு பொறியியல் சவால்களுக்கு மத்தியில் அணையை சீனா கட்டி வருகிறது.
முக்கியமாக, உலகின் சுவராக கருதப்படும் திபெத்திய பீடபூமியானது அதன்கீழே உள்ள டெக்டானிக் தகடுகளால் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாக விளங்கி வருகிறது. இதில் அணை கட்டுவதால் பாதிப்பு ஏற்படும் என சீன புவியியலாளா்களே எதிா்க்கும் சூழலில் அதை சீன அரசு கண்டுகொள்ளவில்லை.
மாறாக புதிய அணையால் பிரம்மபுத்திரா நதி பாயும் பகுதிகளில் பேரிடா் மீட்பு எளிதாகும் என்ற வாதத்தை சீன அரசு தொடா்ந்து முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










