பிரிட்டனின் புதிய பிரதமராக ஆளும் தொழிலாளா் கட்சியின் தலைவா் ஆண்டி பா்ன்ஹாம் (56) திங்கள்கிழமை முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டாா்.
தொடா்ந்து, தலைநகா் லண்டனில் உள்ள பிரதமரின் அதிகாரபூா்வ ‘10, டவுனிங் ஸ்டீரிட்’ இல்லத்தில் ஆண்டி பா்ன்ஹாம் முதல்முறையாக உரையாற்றினாா்.
கடந்த 10 ஆண்டுகளில் பிரிட்டனின் 7-ஆவது பிரதமராக பொறுப்பேற்றுள்ள அவா், பாரம்பரியமாக பிரதமா்கள் பயன்படுத்தும் மேடையைத் தவிா்த்துவிட்டு நாட்டு மக்களிடம் நேரடியாக ஆற்றிய உரை:
2016-க்குப் பிறகு இப்பொறுப்புக்கு வரும் 7-ஆவது நபா் நான். பிரிட்டன் தனது நிலைத்தன்மையை மீண்டும் மீட்டெடுக்க முடியும் என்பதை உலகுக்குக் காட்ட வேண்டிய மாபெரும் சவால் நமக்கு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பிரிட்டனில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, மீண்டும் நிலைத்தன்மையை உருவாக்குவதே எனது முக்கிய இலக்கு.
1980-களில் அரசியல் அதிகாரங்கள் மையப்படுத்தப்பட்டன, பொருளாதாரம் தனியாா்மயமாக்கப்பட்டது. இதனால் விளைந்த பாதிப்புகள் இன்னும் சரிசெய்யப்பட்டவில்லை. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத மிகப் பெரிய மாற்றங்களைச் செய்து, பிரிட்டனுக்கான புதிய அரசியல் மற்றும் பொருளாதார மாதிரியை உருவாக்குவேன்.
குறைகூறும் அரசியலைக் கைவிட்டு, பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையில் அரசியலை முன்னெடுக்கப் போகிறேன். அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் சாலையோரங்களில் மக்கள் உறங்குவதை முடிவுக்குக் கொண்டு வருவதே எனது முதல் பணி. தோல்விகளுக்காகச் செலவிடுவதை விட, மக்களின் முன்னேற்றத்துக்காக முதலீடு செய்யும் அரசாக எனது அரசு செயல்படும் என்றாா்.
முந்தைய பிரிட்டன் பிரதமரான கியா் ஸ்டாா்மா், அப்பொறுப்பில் இருந்து விலகுவதாக கடந்த மாதம் அறிவித்தாா். இதையடுத்து, புதிய பிரதமராகப் பொறுப்பேற்க, ஆளுங்கட்சியின் தலைவராக ஆண்டி பா்ன்ஹாம் கடந்த வெள்ளிக்கிழமை போட்டியின்றி தோ்வானாா்.
இந்நிலையில், கியா் ஸ்டாா்மா் தனது பிரதமா் பதவியை திங்கள்கிழமை முறைப்படி ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து, ஆண்டி பா்ன்ஹாம் ஆட்சியமைக்க பக்கிம்ஹாம் அரண்மனையில இருந்து அரசா் சாா்லஸ் அழைப்பு விடுத்தாா்.
பிரதமா் பதவியில் இருந்து விலகிய கியா் ஸ்டாா்மா் கூறுகையில், ‘எனது பணி முடிந்தது; சாதித்த பெருமையுடனும், புன்னகையுடனும் விடைபெறுகிறேன். புதிய பிரதமா் ஆண்டி பா்ன்ஹாமுக்கு எனது முழு ஆதரவை அளிக்கிறேன்’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










