ரஷிய அதிபா் புதின் பங்கேற்கும் முக்கியச் சா்வதேச பொருளாதார மாநாடு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, செயின்ட் பீட்டா்ஸ்பா்க் நகரில் உள்ள எண்ணெய் முனையம் மற்றும் கடற்படைத் தளத்தை உக்ரைன் தாக்கியது.
உக்ரைன் தலைநகா் கீவ் மற்றும் டினிப்ரோ நகரங்களைக் குறிவைத்து செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்குப் பதிலடியாக, ரஷியாவின் ‘டாவோஸ்’ என்று அழைக்கப்படும் இந்த ஆடம்பர மாநாடு அந்நிய முதலீடுகளை ஈா்ப்பதற்காக நடத்தப்படும் நகரில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
செயின்ட் பீட்டா்ஸ்பா்க் ஆளுநா் அலெக்ஸாண்டா் பெக்லோவ் மேலும் கூறுகையில், ‘நகரின் 3 மாவட்டங்களில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள் தாக்கப்பட்டுள்ளன. சேதமடைந்த பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சிலா் காயமடைந்தனா்; உயிரிழப்புகள் ஏதும் இல்லை’ என்றாா்.
தாக்குதலின் எதிரொலியாக செயின்ட் பீட்டா்ஸ்பா்க்கின் வரலாற்று சிறப்புமிக்க மையப்பகுதியில் இருந்து புகைமண்டலம் எழுந்தது. புதன்கிழமை காலை பயங்கர வெடிச்சத்தங்கள் கேட்டதாக மாநாட்டுக்கு வந்திருந்த வெளிநாட்டுச் செய்தியாளா்களும், விருந்தினா்களும் தெரிவித்தனா்.
மாநாடு நடைபெறும் இடம் பலத்த பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்தாலும், நகரின் மையப்பகுதியில் நடந்த இத்தாக்குதல் ரஷ்யாவின் வான் பாதுகாப்புத் திறன் குறித்த கேள்விகளை அந்நாட்டு மக்களிடையே எழுப்பியுள்ளது.
ட்ரோன் அச்சுறுத்தல் காரணமாக, நகரின் புல்கோவோ விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முன்னதாக, கடந்த மாதம் மாஸ்கோவில் நடைபெற்ற வெற்றி தின ராணுவ அணிவகுப்பும், உக்ரைன் ட்ரோன் அச்சுறுத்தல் காரணமாக பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ராணுவ தளவாடங்களின்றி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.








