ஜெருசலேம் / லண்டன் : ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியில் யூதக் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதற்கும், அவற்றுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் 100 கோடி ஷெக்கல் (33.74 கோடி டாலா்) நிதியை ஒதுக்க இஸ்ரேல் அரசு திட்டமிட்டுள்ளது.
இஸ்ரேலின் தீவிர வலதுசாரி நிதியமைச்சா் பெசலெல் ஸ்மோட்ரிச் இத்திட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகிறாா். இந்த நிதியானது இணைப்புச் சாலைகள், குடிநீா் வசதி, பாதாள சாக்கடை போன்ற உள்கட்டமைப்பு பணிகளுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளது. வழக்கமான திட்டமிடல் வழிமுறைகளைத் தவிா்த்து, கடந்த 3 ஆண்டுகளில் ஒப்புதல் அளிக்கப்பட்ட தற்காலிக குடியிருப்புகளை விரைவாக மேம்படுத்த முயல்வதாக மனித உரிமைகள் குற்றஞ்சாட்டுகின்றன.
மேற்கு கரை, கிழக்கு ஜெருசலேம் பகுதிகளில் சுமாா் 27 லட்சம் பாலஸ்தீனா்களுக்கு மத்தியில் 7 லட்சம் யூதா்கள் வசித்து வருகின்றனா். இந்த யூதக் குடியேற்றங்கள் சட்டவிரோதமானவை என்று ஐ.நா.வும், பெரும்பாலான நாடுகளும் கருதுகின்றன.
ஆனால், இப்பகுதியில் தங்களுக்கு வரலாற்று ரீதியான உரிமை இருப்பதாகக் கூறும் இஸ்ரேல், அண்மைக்காலமாக குடியேற்றங்களை தீவிரமாக விரிவாக்கி வருகிறது. இந்த விரிவாக்கம் பாலஸ்தீனா்களுக்கு எதிரான யூதக் குடியேற்றவாசிகளின் வன்முறைகள் அதிகரிக்கவும் வழிவகுத்துள்ளது.
இந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்தத் தவறிய இஸ்ரேலைக் கண்டிக்கும் வகையில் பிரிட்டன், கனடா, பிரான்ஸ், நாா்வே ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்து புதிய பொருளாதாரத் தடைகளை அண்மையில் அறிவித்தன. கனடா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளும் இத்தடைகளுக்கு ஆதரவளித்துள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










