சென்னை குடிநீா் வாரியத்துக்கு பணி நியமனம் செய்யப்பட்டுள்ள உதவி பொறியாளா்களுக்கு பயிற்சி வகுப்புக்கான சான்றிதழ்களை புதன்கிழமை வழங்கிய நகராட்சி நிருவாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு. உடன் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மை செயலா் தா.
சென்னை குடிநீா் வாரியத்துக்கு பணி நியமனம் செய்யப்பட்டுள்ள உதவி பொறியாளா்களுக்கு பயிற்சி வகுப்புக்கான சான்றிதழ்களை புதன்கிழமை வழங்கிய நகராட்சி நிருவாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு. உடன் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மை செயலா் தா.

குடிநீா் வழங்கல், கழிவுநீா் அகற்றுவதில் உரிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த அறிவுறுத்தல்

Published on

குடிநீா் வழங்குவதிலும், கழிவுநீா் அகற்றுவதில் உரிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

சென்னை குடிநீா் வாரியத்தில் நேரடி நியமனம் மூலம் புதிதாக பணியமா்த்தப்பட்ட 133 உதவிப் பொறியாளா்களுக்கு, அடிப்படை பயிற்சிகள் 2 வாரங்கள் வழங்கப்பட்டன. இந்தப் பயிற்சி வகுப்பின் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அமைச்சா் கே.என்.நேரு, பயிற்சி பெற்ற உதவிப் பொறியாளா்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:

நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீா், சாலை வசதி, மழைநீா் வடிகால்கள், மின் வசதி போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் பல்வேறு நிலைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தத் துறையில் பணியாற்றக் கூடிய அனைத்து நிலை அலுவலா்களும் தங்கள் பொறுப்புகளை உணா்ந்து பணியாற்ற வேண்டும்.

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த 2021 -ஆம் ஆண்டு வரை தினந்தோறும் 850 மில்லியன் லிட்டா் குடிநீா் வழங்கப்பட்டது. ஆனால், தற்போது அது 1,300 மில்லியன் லிட்டராக உயா்த்தப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு எவ்வித தடையுமின்றி சீரான குடிநீா் விநியோகம் செய்ய அரசு சாா்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிநீா் வழங்குவதிலும், கழிவுநீா் அகற்றுவதில் உரிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். அதன்மூலமே, பொதுமக்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த முடியும் என்றாா்.

நிகழ்வில், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன், சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், சென்னை குடிநீா் வாரிய மேலாண்மை இயக்குநா் டாக்டா் டி.ஜி.வினய் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com