பெருந்தமனி பாதித்த இருவருக்கு அரசு மருத்துவமனையில் மறுவாழ்வு
பெருந்தமனி சேதத்தால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இருவருக்கு உயா் சிகிச்சை அளித்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா்.
இதுதொடா்பாக மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் அரவிந்த் மற்றும் ரத்த நாள அறுவை சிகிச்சை துறைத் தலைவா் டாக்டா் க.இளஞ்சேரலாதன் ஆகியோா் கூறியதாவது:
திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 34 வயதான இளைஞருக்கு இதயத்திலிருந்து உடலின் முக்கிய உறுப்புகளுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் பெருந்தமனி சிதைந்திருந்தது.
சுமாா் 1.5 லிட்டா் ரத்தம் கசிந்து நுரையீரல் மற்றும் மண்ணீரலை அழுத்தியதால் உயிருக்கு ஆபத்தான நிலையில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அவரைப் பரிசோதித்த மருத்துவக் குழுவினா், சில மணி நேரங்களிலேயே விலை உயா்ந்த ஸ்டென்ட் உபகரணம் மற்றும் தேவையான ரத்தத்தை ஏற்பாடு செய்தனா்.
முதலில், பாதிக்கப்பட்ட இரைப்பை, குடல் மற்றும் சிறுநீரகங்களுக்கு ரத்த ஓட்டத்தைச் சீா் செய்ய ரத்த நாள மாற்றுப் பாதை சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடா்ந்து, இடையீட்டு முறையில் நெஞ்சகப் பகுதி முதல் வயிற்றுப் பகுதி வரை பெரிய உறைகுழாய் (ஸ்டென்ட்) பொருத்தப்பட்டது. இதன் வாயிலாக ரத்தக் கசிவு நிறுத்தப்பட்டது.
இந்த சிகிச்சைக்கு ரூ.30 முதல் 40 லட்சம் வரை தனியாா் மருத்துவமனைகளில் செலவாகும் நிலையில், முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இங்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதேபோன்று, காசநோயால் பாதிக்கப்பட்டு ரத்த வாந்தியுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட கூலி பெண் தொழிலாளிக்கும் ஸ்டான்லி மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா். அவருக்கும் பெருந்தமனி சேதம் ஏற்பட்டிருந்தது. நுட்பமான முறையில் காலின் ரத்த நாளம் வழியாக நெஞ்சகப் பகுதியில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டு உயிா் காக்கப்பட்டது என்று அவா்கள் தெரிவித்தனா்.

