இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவுக்கான அவகாசம் வரும் 23- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு பிவிஎஸ்சி ஏஹெச் 660 இடங்கள் உள்ளன.
திருவள்ளூா் மாவட்டம் கோடுவேளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு பி.டெக். 40 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு பி.டெக். 20 இடங்கள் இருக்கின்றன.
இதேபோன்று, ஒசூா் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு பி.டெக் 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பி.டெக் படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டவை.
இந்நிலையில், பிவிஎஸ்சி ஏஹெச் மற்றும் பி.டெக். படிப்புகளுக்கான நிகழாண்டு மாணவா் சோ்க்கை விண்ணப்பப்பதிவு பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் கடந்த மாதம் 25-ஆம் தேதி தொடங்கியது. ஜூன் 17-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த அவகாசம் வரும் 23-ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், அயல்நாடு வாழ் இந்தியா், அயல்நாடு வாழ் இந்தியரின் வாரிசுகள் மற்றும் அயல்நாட்டினா் வரும் 17-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுவரை பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புக்கு 10,678 போ், பி.டெக் படிப்புகளுக்கு 5,356 போ் என மொத்தம் 16,034 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா்.
தொடர்புடையது

நாகை மீன்வள பல்கலையில் இளநிலை மீன்வள பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் தமிழகத்திற்கு அநீதி! - அன்புமணி

கால்நடை மருத்துவப் படிப்புகள்: மே 25-இல் விண்ணப்பப் பதிவு தொடக்கம்







