காஞ்சிபுரம் பேருந்துநிலையத்தில் தொழிற்சாலை ஊழியர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல்
By DIN | Published On : 19th December 2021 06:06 PM | Last Updated : 19th December 2021 06:06 PM | அ+அ அ- |

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக குவிந்த தனியார் நிறுவனத்தின் தொழிலாளர்கள்.
காஞ்சிபுரத்தில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 1000க்கும் மேற்பட்டோருக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டதால் அவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் குவிந்ததால் கூட்ட நெரிசல் காணப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சுங்குவார்சத்திரத்தில் செயல்பட்டு வரும் மின்னணு உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலையில் பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்கியிருக்கும் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்பட்டதால் 100க்கும் மேற்பட்டோருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்றனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் ஒரு சிலர் திரும்பவில்லை என சர்ச்சை எழுந்தது.
இதையும் படிக்க- உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டுமென மக்களே விரும்புகின்றனர்: அமைச்சர் முத்துசாமி
இதனால் அந்நிறுவன தொழிலாளர்கள் பல ஆயிரக்கணக்கானோர் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த அமைச்சர்கள் சி.வி.கணேசன், தா.மோ.அன்பரசன், ஆட்சியர் மா.ஆர்த்தி அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவருக்கும் ஒரு வாரம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் எனவும் தரமற்ற உணவு வழங்கிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியதால் போராட்டம் கைவிடப்பட்டது.
ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டதால் தொழிலாளர்கள் தங்கியிருந்த விடுதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே தங்களது உடமைகளுடன் சொந்த ஊர்களுக்கு செல்ல காஞ்சிபுரம் பேருந்து நிலையத்துக்கு வந்தனர். தென்மாவட்டங்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகமானதாக இருந்ததால் காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறையினர் 100க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகளையும் ஏற்பாடு செய்து கொடுத்தனர்.
ஒரே நேரத்தில் 1000க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனத்தின் தொழிலாளர்கள் பேருந்து நிலையத்தில் கூடியதால் கடுமையான கூட்ட நெரிசலை காண முடிந்தது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...