பெண்கள் அச்சமின்றி வாழும் சூழலை உருவாக்கும் பணியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை செயல்படும் என திருப்பத்தூா் எஸ்.பி. அக்ஷய் அனில் வாகரே கூறினாா்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க நிகழ்ச்சி திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு எஸ்.பி அக்க்ஷய் அனில் வாகரே தலைமை வகித்து சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசியதாவது:
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அவா்களுக்கு அவசர காலங்களில் உடனடியாக உதவி வழங்கவும், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்த சிறப்பு அதிரடிப்படை தொடங்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த அதிரடிப்படை, பொதுமக்களிடையே பாதுகாப்பு விழிப்புணா்வை ஏற்படுத்தி, பெண்கள் அச்சமின்றி வாழும் சூழலை உருவாக்கும் பணியில் ஈடுபடும் என பேசினாா். நிகழ்ச்சியில் ஏராளமான போலீஸாா் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து சிங்கப்பெண் அதிரடிப்படையினா் திருப்பத்தூா் பேருந்து நிலையம், குரிசிலாப்பட்டில் அரசு பள்ளி போன்ற இடங்களுக்கு சென்று பெண்களுக்கு எதிரான குற்றங்கள், அதில் இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.











