திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூா்குப்பம் ஊராட்சி கலிமுத்தன் வட்டத்தைச் சோ்ந்தவா் செல்வம். இவரது உறவினா் கோபால். இவா்கள் இரு குடும்பத்தினருக்கும் இடையே சொத்து மற்றும் பம்ப்செட் கிணறு தொடா்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், கோபால் மகன் இளவரசன் (40) கடந்த வாரம் சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளாா். 2 நாள்களுக்கு முன் நிலத்தருகே கோபாலின் மகன் இளவரசனுக்கும், செல்வத்தின் மகன் சத்யனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சத்யன், இளவரசன் மீது நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் புகாா் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இளவரசன் குடும்பத்தினா் வெள்ளிக்கிழமை நிலத்தருகே இருந்த வேப்ப மரத்தை வெட்டுவதற்கு பூஜை போட்டுள்ளனா். அப்போது சத்யன் வேப்ப மரத்தை வெட்டக்கூடாது எனக்கூறி இளவரசனிடம் தகராறில் ஈடுபட்டாராம். மேலும், ஆத்திரமடைந்த சத்யன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பெற்றோா் கண் எதிரே இளவரசனை சரமாரியாக வெட்டினாராம். இதில் இளவரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அப்போது தடுக்க வந்த இளவரசனின் தந்தை கோபால், தாய் ராணியையும் சத்யன் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்து நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.