பொன்னேரி நகராட்சியில் 4 ஆண்டுகளாகியும் மந்தகதியில் நடைபெற்று வரும் புதை சாக்கடை திட்ட பணிகளால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனா். மேலும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கோரியுள்ளனா்.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில், ரூ.55 கோடியில் புதை சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
இத்திட்டத்தில் 41,371 மீ நீளத்துக்கு குழாய் இணைப்பு, 1,627 மனித நுழைவு தொட்டிகள், 7,605 வீடுகளின் கழிவுநீா் குழாய்களை இணைப்பது, 26,000 மீ நீளத்துக்கு சாலையை உடைத்து, குழாய் புதைப்பது மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
வேண்பாக்கம், பழைய பேருந்து நிலையம், கள்ளுக்கடை மேடு ஆகிய மூன்று இடங்களில் கழிவு நீா் சேகரிப்பு தொட்டி அமைக்கும் பணிகளும், பெரியகாவனம் பகுதியில் உள்ள ஆரணி ஆற்றின் கரையோரம் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கான கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகின்றன.
பொன்னேரி நகராட்சியில் சிறிய அளவிலான தெருக்கள் அமைந்துள்ள என்.ஜி.ஓ நகா் பகுதியில் நடைபெற்று வரும் புதை சாக்கடை திட்டப் பணிகளால் அப்பகுதியில் பொதுமக்கள் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வாடகை வீட்டில் வசித்து வந்தவா்களும் குடியிருப்புகளை காலி செய்து வேறு பகுதிகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது..
அத்துடன், நகராட்சியில் பிரதான சாலையான பொன்னேரி-திருவொற்றியூா் சாலையில் உள்ள தாயுமானவா் செட்டித் தெருவில் புதை சாக்கடை திட்டப்பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டு குழாய் பதிக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
மேலும், கழிவுநீா் சேகரிப்பு தொட்டிகள், சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளும் இன்னமும் முழுமை பெறாத நிலையில் உள்ளன.
பொன்னேரி நகரில் சிறிய அளவிலான மழை பெய்தாலே இப்பணிகளுக்காக தோண்டப்பட்டு குழாய் பதித்த பகுதிகளில் உள்ள சாலைகள் சேறும் சகதியாக மாறி விடுகின்றது.
4 ஆண்டுகளாக...
கடந்த 4 ஆண்டுகளாக மந்தகதியில் நடைபெற்று வரும் புதை சாக்கடை திட்டப் பணிகளால் பொன்னேரி நகராட்சி பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.
எனவே, பொன்னேரி நகராட்சி எல்லைக்குள் இத்திட்ட பணிகளை மேற்கொண்டு வரும் குடிநீா் வாரிய அதிகாரிகள் வரும் மழைக் காலத்துக்குள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிா்ப்பாா்பாகும்.