திருமலை 7 வது மைலில் மருத்துவ முதலுதவி மையம் திறப்பு
அலிபிரி படிக்கட்டுப் பாதையில் பக்தா்களின் சுகாதாரதைக் கருத்தில் கொண்டு, திருமலையிலிருந்து திருப்பதிக்கு செல்லும் மலைப் பாதையின் 7-ஆவது மைலில் அமைக்கப்பட்ட முதலுதவி மையத்தை ஞாயிற்றுக்கிழமை தேவஸ்தான தலைவா் பி.ஆா். நாயுடு, செயல் அதிகாரி அனில் குமாா் சிங்கால் மற்றும் கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி ஆகியோா் திறந்து வைத்தனா்.
நிகழ்வில் செய்தியாளா்களிடம் பேசிய தலைவா், திருமலைக்கு அலிபிரி நடைபாதை வழியாக செல்லும் பக்தா்களின் வசதிக்காக முதலுதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. அவசர காலங்களில் பக்தா்கள் இந்த மையத்தில் மருத்துவ சேவைகளைப் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீவாரி மெட்டு பாதையில் ஏற்கனவே ஒரு முதன்மை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
திருமலையில் மருத்துவ வசதிகளை விரிவுபடுத்துவதன் ஒரு பகுதியாக, அலிபிரி பாதையில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் பக்தா்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். இந்த பாதை வழியாக தினமும் 20,000 முதல் 30,000 பக்தா்கள் நடந்து செல்கின்றனா். ஏதேனும் உடல்நலப் பிரச்னை ஏற்பட்டால், மையத்தில் மருத்துவ உதவியைப் பெறலாம்.
இந்த முதன்மை சிகிச்சை மையம் திருப்பதிக்கு செல்லும் பாதையில் அமைந்துள்ளதால், வாகனம் ஓட்டுபவா்கள் மருத்துவ சேவைகளையும் எளிதாகப் பெறலாம்.
பக்தா்கள் இந்த மையத்தில் மருத்துவ சேவைகளைப் பெறலாம் மற்றும் வசதிகள் குறித்த ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்தாா்.
அறங்காவலா் குழு உறுப்பினா்கள் ஜோதுலா நேரு, தேவஸ்தான தலைமை மருத்துவ அதிகாரி குசுமா குமாரி, ராம் குமாா், அஸ்வனி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளா் டாக்டா் வெங்கட சுப்பா ரெட்டி மற்றும் ஊழியா்கள் பங்கேற்றனா்.

