தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருவண்ணாமலையில் மீண்டும் மண்சரிவு: மீட்புப் பணிகள் தீவிரம்!

திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்டது பற்றி...

News image

மண்சரிவு ஏற்பட்ட பகுதி

Updated On :2 டிசம்பர் 2024, 11:36 am

DIN

திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட மண்சரிவில் புதைந்த வீடுகளுக்குள் 7 பேரை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு இடத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

ஃபென்ஜால் புயல் காரணமாக கடந்த சனிக்கிழமை முதல் திருவண்ணாமலையில் கனமழை பெய்து வருகின்றது. பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

இந்த நிலையில், திருவண்ணாமலை கோவில் பின்புறம் மலை அடிவாரப் பகுதியான வ.உ.சி நகர் 11-ஆவது தெருவில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் சரிந்து விழுந்ததில் 3 வீடுகள் தரைமட்டமானது.

இதில், ராஜ்குமார், அவரது மனைவி, 5 சிறுவர்கள் என 7 பேர் வீடுகளுக்குள் சிக்கித் தவித்து வருவதாக தகவல் வெளியான நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், தீயணைப்புத் துறையினா் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டு விடியவிடிய 15 மணிநேரமாக 7 பேரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு திங்கள்கிழமை காலை நேரில் சென்று மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் இடத்தை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களுடன் எ.வ.வேலு பேசியதாவது:

“3 நாள்களாக திருவண்ணாமலையில் பலத்த மழை பெய்துள்ளது. அரசின் சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தாழ்வான பகுதியை சேர்ந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

2 வீடுகள் மீது பாறைகள் உருண்டு விழுந்துள்ளன. 5 குழந்தைகள் உள்பட 7 பேர் உடன் மண்ணுக்குள் புதைந்த வீடு, மண், கல்லின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.

இன்று பிற்பகல் ஐஐடி வல்லுநர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்ய உள்ளனர்.

மண்ணில் புதைந்த வீட்டிற்குள் இருப்பவர்களை காப்பாற்றும் பணி தொடரும். இடர்பாடுகளால் மீட்பு பணியை மேற்கொள்வதில் சில சிக்கல் நிலவுகிறது” எனத் தெரிவித்தார்.

இதனிடையே, ஏற்கெனவே நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிக்கு அருகாமையில் திங்கள்கிழமை காலை மீண்டும் மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், அப்பகுதி மக்கள் மண்சரிவால் அச்சமடைந்து அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.