முறிந்து விழுந்த மரக்கிளையால் விபத்து அபாயம்
செங்கம் அருகே குப்பனத்தம் சாலையில் புளிய மரக்கிளை முறிந்து அபாய நிலையில் உள்ளது. விபத்து ஏற்படும் முன் மரக்கிளையை அகற்றவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
செங்கம் - பரமனந்தல் இடையிலான சுமாா் 5 கி.மீ. தொலைவு சாலையில் இரு புறமும் புளிய மரம் உள்ளிட்ட மரங்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக பெய்த புயல் மழை காற்றில் நகராட்சி குப்பை கிடங்கு பகுதியில் இருக்கும் புளிய மரத்தில் பெரிய கிளை முறிந்து மற்றொரு மரத்தின் கிளையில் தொற்றிக் கொண்டுள்ளது.
அந்த மரம் காற்றடிக்கும்போது கிழே விழும் அபாய நிலை உள்ளது. அந்தச் சாலையில் பள்ளி வாகனங்கள் செல்வது வழக்கம். மேலும் பரமனந்தல், குப்பனத்தம், கொட்டாவூா், கிளையூா், பன்ரேவ் உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்லும் சாலையாகும். இந்தச் சாலையில் வாகனப் போக்குவரத்து எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். அதனால் முறிந்த விழுந்து தொற்றிக் கொண்டுள்ள மரக்கிளையை விபத்து ஏற்படும் முன் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

