கோவை, ஜூன் 13: கருத்து வேறுபாடுகள் இருந்தால்தான் ஆராய்ச்சி வளரும் என்று பேராசிரியர் ம.ரா.போ.குருசாமி கூறினார்.
தமிழ் படைப்பாளர்கள், ஆய்வாளர்கள் சார்பில் கோவையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இலக்கிய கருத்தரங்கில் அவர் பேசியது:
எந்த விஷயத்திலும் கருத்து வேறுபாடுகள் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும்போதுதான் பல்வேறு ஆராய்ச்சிகள் வெளிவரும். ஆராய்ச்சி வளர்ச்சி பெறும்.
தமிழ் வளர்ச்சி, தமிழ் நலம் பற்றி மக்கள் சிந்திக்க வேண்டும். பேச வேண்டும். இன்றைய தமிழ்ப் புலவர்கள் சிலர் ஒப்பிலக்கியத்தை குழப்பி வருகின்றனர். இரு மாறுபட்ட காப்பியங்களை ஒப்பீடு செய்து ஆய்வு செய்வது தான் ஒப்பிலக்கியம். ஒரே காப்பியத்தில் இருக்கும் வேறுபாடுகளை ஒப்பிடுவது ஒப்பிலக்கியம் ஆகாது என்றார்.
புதுவை தமிழ்ப் படைப்பாளிகள் பேரவைத் தலைவர் சூரியதீபன்: தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தினமும் தாக்கப்படுகின்றனர். மலேசியா, சிங்கப்பூர், மொரிஷியஸ் உள்ளிட்ட நாடுகளில் தமிழ்ப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. 133 நாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் தமிழ் படிக்க பள்ளிகள் இல்லை. இங்கு தமிழ்ப் பள்ளிகளை திறக்க மத்திய, மாநில அரசுகள் நிதி உதவி அளிக்க வேண்டும் என்றார்.
விழாவில் தமிழ் மலர் 2010 என்னும் நூலை பேராசிரியர் ம.ரா.போ.குருசாமி வெளியிட்டார். தமிழ்நேயம் ஆசிரியர் கோவை ஞானி வரவேற்றார். ஈரோடு தமிழர் வாழ்வுரிமை இயக்க செயலர் கண.குறிஞ்சி ஆய்வுரை வழங்கினார். திண்டிவனம் மண் மொழி ஆசிரியர் ராசேந்திர சோழன், மருத்துவர் அரங்கசாமி, வெப்துனியா ஆசிரியர் அய்யநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.
தமிழ்க் கல்வி, தமிழ் வரலாறு, தமிழியக்கம், தமிழ் நாகரிகம் பற்றி தமிழறிஞர்களின் 22 ஆய்வுக்கட்டுரைகளும், சங்க இலக்கியம், புலம்பெயர் தமிழிலக்கியம் குறித்த தமிழியல் ஆய்வாளர்களின் 20 கட்டுரைகளும் தமிழ் மலர் 2010 நூலில் இடம் பெற்றுள்ளன.