கோவை மாவட்ட பகுதி விவசாயிகள் பயன்பெறும்வகையில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை காரமடையை அடுத்த பில்லூர் பகுதியிலிருந்து துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஒக்கலிக மகாஜன சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஒக்கலிகர் மகாஜன சங்கம் மற்றும் வட்டார கிளை சங்கங்களின் நிர்வாகிகள் அறிமுக விழா ஆலாங்கொம்பு பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு, சிறுமுகை வட்டார ஒக்கலிக மகாஜன சங்கத் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். வட்டார நிர்வாகிகள் சண்முகசுந்தரம், கனகராஜன், ஆனந்தன், சண்முகம் முன்னிலை ஆகியோர் வகித்தனர். லிங்காபுரம் பழனிசாமி வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக ஒக்கலிகர் மகாஜன சங்கத்தின் மாநிலத் தலைவர் வெள்ளிங்கிரி பங்கேற்று பேசினார்.
தொடர்ந்து மகாஜன சங்க மாவட்டத் தலைவர் தம்பு, நண்பர்கள் பொதுப்பணி சங்க மாவட்டத் தலைவர் டாக்டர் ரங்கசாமி, முன்னாள் தலைவர் ஆசிரியர் கந்தசாமி, சங்கத்தின் சட்ட ஆலோசகர் ஜோதிமணி, அரிமா மாவட்ட நிர்வாகி பி.என். ராஜேந்திரன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ரேணுகா ராஜன், உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.
கூட்டத்தில், ஒக்கலிகர் மகாஜன சங்கத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும், அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை ஈரோடு மாவட்ட பகுதியிலிருந்து செயல்படுத்துவதைக் கண்டித்து காரமடையில் உண்ணாவிரதம் இருப்பது, கோவை மாவட்ட பகுதி விவசாயிகள் பயன்பெறும்வகையில் இத்திட்டத்தை காரமடையை அடுத்த பில்லூர் பகுதியிலிருந்து துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், முன்னாள் ஊராட்சித் தலைவர் ஆறுமுகம், முன்னாள் அரிமா சங்கத் தலைவர் சுப்பையன், வட்டாரத் தலைவர்கள் ராமசாமி, சோமசுந்தரம், ராஜாமணி, சுப்பையன், நஞ்சையன், மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். வட்டார சங்க நிர்வாகி பழனிசாமி நன்றி கூறினார்.