4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

அடிப்படை வசதிகளற்ற குண்டூர் பழங்குடியின கிராமம்

மேட்டுப்பாளையம் அருகே, வெள்ளியங்காடு ஊராட்சியில் உள்ள குண்டூர் பழங்குடியின கிராமத்தில் அடிப்படை வ

Updated On :22 அக்டோபர் 2018, 2:22 am

மேட்டுப்பாளையம் அருகே, வெள்ளியங்காடு ஊராட்சியில் உள்ள குண்டூர் பழங்குடியின கிராமத்தில் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.  
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே, வெள்ளியங்காடு ஊராட்சிக்கு உள்பட்ட மலைப் பகுதிகளில் குண்டூர், அத்திக்கடவு, சொரண்டி, கொறவன் கண்டி, கூடப்பட்டி மேக்கா ஆகிய பழங்குடியின கிராமங்கள் உள்ளன. 
இதில் குண்டூர் கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இவர்கள் வெள்ளியங்காடு, காரமடை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம், கூலி வேலை, கட்டட வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்த கிராம மக்களுக்கு குடிநீர், சாலை, கழிவறை, மின்சாரம், குடியிருப்பு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. கழிவறை வசதி இல்லாததால் காட்டுச் செடிகளில் மறைப்பு ஏற்படுத்திய கழிவறை, சேலைகளால் தடுக்கப்பட்ட குளியலறை போன்றவற்றையே பயன்படுத்தி வருகின்றனர். 
மேலும், இப்பகுதிக்கு சாலை வசதி ஏற்படுத்தி 30 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. சாலை வசதி இல்லாதால் இங்கு பேருந்துகள் வந்து செல்வதில் கடும் சிரமம் ஏற்படுகிறது. உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களைத் தொட்டில் கட்டித் தூக்கி செல்லும் அவல நிலை நிலவுகிறது. 
இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என ஊராட்சி அதிகாரிகளைத் தொடர்பு கொண்டால் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை என கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 இதுகுறித்து பழங்குடியின கிராமத்தை சேர்ந்த கொடியூர் மல்லன் கூறியதாவது: 
கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக கூரை, ஓடு வேய்ந்த வீடுகளிலேயே வசித்து வருகிறோம். இதை அவ்வப்போது யானைகள் கூட்டமாக வந்து இடித்துச் சென்றுவிடுகின்றன. 
இதனால், மழை காலங்களில் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகிறோம். ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் உப்புத் தண்ணீரே கிடைக்கிறது. சுத்தமான குடிநீர் வேண்டும் எனில் 3 கி.மீ. தூரம் நடந்து  அத்திக்கடவு சென்று குடிநீர் எடுத்துவர வேண்டிய நிலை உள்ளது. தண்ணீர் எடுத்துச் செல்லும்போது யானைகளால் தாக்கப்படும் அபாயமும் உள்ளது.
மேலும், இப்பகுதிக்கு குறைந்த அழுத்தமுள்ள மின்சாரம் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. இதனால் மிக்ஸி, கிரைண்டர், டி.வி., மின்விசிறி உள்ளிட்ட எந்தப் பொருள்களையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இந்த மின்சாரத்தில் எரியும் பல்புகள் குறைந்த வெளிச்சத்தை மட்டுமே தருகின்றன. சாலை வசதி இல்லாதால் இக்கிராமத்துக்கு நோயாளிகளை ஏற்றிச் செல்வதற்குக்கூட ஆம்புலன்ஸ் வாகனங்கள் வருவதில் தயக்கம் காட்டி வருகின்றன. 
 கழிவறை வசதிகள் இல்லாதால் இக்கிராம மக்கள் சேலையால் தடுப்பு ஏற்படுத்தி கழிவறையாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
பழங்குடியின கிராம மக்களுக்கு அரசு பல ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்து வருகிறது. ஆனால், அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் அந்தத் தொகைகள் அனைத்தும் பயனில்லாமல் போய்விட்டன. 
எனவே, பழங்குடியின் மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு அந்தத் தொகையைப் பயன்படுத்தி முன்னேற்றமடைய தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.