கோவை மருதமலை அருகே இன்று அதிகாலை காட்டு யானை தாக்கி முதியவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையிலிருந்து மருதமலை செல்லும் சாலையில் சட்டக் கல்லூரி அமைந்துள்ளது. அந்தக் கல்லூரியின் காவலராக செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த முகமது நியாஸ் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 6 மணி அளவில் டீ குடிப்பதற்காக அருகில் உள்ள டீ கடைக்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது அங்கு நின்றிருந்த ஒற்றை யானை முதியவரை தள்ளிவிட்டதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.