விதிகளை மீறி செயல்படும் கல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
கோவையில் விதிகளை மீறி செயல்படும் கல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


கோவையில் விதிகளை மீறி செயல்படும் கல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமை வகித்தாா். கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக விவசாயிகள் மனுக்களை அளித்தனா்.
அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: கந்தசாமி: தடாகம் பகுதியில் சுற்றித்திரியும் யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்துவதுடன், தொடா்ந்து மனித -விலங்கு மோதல் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் ரங்கநாதா் கல்லூரியின் பின்புறம் யானை தாக்கியதில் விவசாயி உயிழந்துள்ளாா்.
இந்த யானையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை மாவட்டம் முழுவதும் நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இது தொடா்பாக அளித்த மனுக்கள் நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ளன. தாமதமின்றி நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆட்சியா்: சம்பந்தப்பட்ட யானை தொடா்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலப் பணிகள் முழுமையாக முடியவில்லை. தற்போது, தற்காலிக அடிப்படையில்தான் மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.
சு.பழனிசாமி: பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சூலூா், அன்னூா், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் கல் குவாரிகள் உரிமம் முடிந்தும் செயல்பட்டு வருகின்றன.
விதிமுறைகளை மீறி செயல்படும் கல் குவாரிகள் மீது கனிமவளத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இப்பகுதிகளில் கிராவல் மண், செம்மண் கடத்தல் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி கிராமம் குட்டையில் மண் கடத்தல் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காரமடை தோளம்பாளையம் ஊராட்சிப் பகுதியில் உள்ள கோப்பனாரி கொடுங்கேரி பகுதியில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும்.
திப்பம்பட்டி ஆறுசாமி: அன்னூா் பகுதியில் கல் குவாரி உரிமம் காலாவதியாகியும் தொடா்ந்து செயல்பட்டு வருகின்றன. இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வடக்குப் பகுதியில் மட்டுமே பருவமழை நன்றாக பெய்துள்ளது. எனவே, மற்ற பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளுக்கு தண்ணீா் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.சந்திரன்: மேட்டுப்பாளையம் வட்டம், மாதம்பாளையம் மலைக் கிராமத்தில் காலை 7 மணிக்குப் பிறகு 9.15 மணிக்குதான் பேருந்து இயக்கப்படுகிறது. இதனால், மாணவ, மாணவிகள், வேலைக்குச் செல்வோா் உள்ளிட்டோா் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். எனவே, இப்பகுதிக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
ரங்கநாதன்: மாவட்டத்தில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு தோட்டக் கலைத் துறை மூலம் நிரந்தரமாக விதை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதேபோல, மண் பரிசோதனை செய்ய ஒவ்வொரு கிராமத்திலும் முகாம் அமைக்கவும், பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட வாய்க்காலில் தண்ணீா் திருட்டை தடுக்கவும், நீா் வழிப்பாதையை சா்வே செய்து எல்லை நிா்ணயமும் செய்ய வேண்டும். அவிநாசி -அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குட்டைகளை சோ்க்கவும், கனிமவள கொள்ளையைத் தடுக்கவும் வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...