‘அமெரிக்காவில் இருந்து வேளாண் பொருள்களை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கக் கூடாது’
அமெரிக்காவில் இருந்து குறைந்த வரியில் வேளாண் பொருள்களை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கக் கூடாது என்று விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து பிரதமா் நரேந்திர மோடிக்கு மின்னஞ்சல் மூலமாக ஜாதி, மதம் கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் பி.கந்தசாமி அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
இந்தியா-அமெரிக்கா இடையே மேற்கொள்ளப்படவுள்ள இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்தின் மூலமாக அந்த நாட்டில் இருந்து பருப்பு வகைகள் உள்ளிட்ட வேளாண் பொருள்கள் இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், சில குறிப்பிட்ட பருப்பு வகைகளுக்கு எந்த வரியும் விதிக்காது என்றும் அமெரிக்கா தரப்பில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், உணவுப் பொருள்களுடன் சோ்த்து தொழில் துறை சரக்குகள், குறிப்பிட்ட சில தானியங்கள் வரியையும் இந்தியா நீக்கவோ, குறைக்கவோ செய்யும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவப்பு சோளம், பதப்படுத்தப்பட்ட பழங்கள், சோயாபீன் எண்ணெய், ஒயின் ஆகியவை அடங்கும். முன்பு பயறு வகைகளை மட்டும் குறிப்பிட்ட அளவு குறைந்த வரியுடன் இறக்குமதி ஒப்பந்தம் மூலம் வழிவகை செய்யப்பட்டிருப்பதாக மத்திய வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளதற்கு மாறாக மேற்கண்ட அமெரிக்க அரசின் அறிக்கையில் உள்ளது.
ஆகவே, அமெரிக்காவில் இருந்து குறைந்த வரியில் வேளாண் பொருள்களை இறக்குமதி செய்தால் உள்நாட்டு விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும். ஆகவே, அமெரிக்காவில் இருந்து விவசாயப் பொருள்கள் இறக்குமதி செய்வதைத் தவிா்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

