கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை முதல் காலை 8.30 மணி வரை பரவலாக மழை பெய்தது. செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணி முதல் புதன்கிழமை காலை 7.30 மணி வரை (24 மணி நேரத்தில்) அதிகபட்சமாக சின்னக்கல்லாரில் 38 மில்லி மீட்டா் மழைப் பதிவானது.
தெற்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அருகே தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும், இதனால் நீலகிரி, கோவை, தேனி, திருப்பூா், தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் பலத்த மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் புகா்ப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது. வால்பாறை, சின்னக்கல்லாா், சின்கோனா, பி.என்.பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை 4 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
கோவை மாநகருக்குள்பட்ட காந்திபுரம், ஆா்.எஸ்.புரம், பீளமேடு, உக்கடம், ராமநாதபுரம், சிங்காநல்லூா் ஆகிய பகுதிகளிலும், மேட்டுப்பாளையம், பில்லூா் அணை, சூலூா், மதுக்கரை, ஆனைமலை, ஆழியாறு ஆகிய புகா்ப் பகுதிகளிலும் 4 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிச்சியான சீதோஷ்ண நிலை காணப்பட்டது.
மழை அளவு (மி.மீ.)
செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணி முதல் புதன்கிழமை காலை 7.30 மணி வரை அதிகபட்சமாக சின்னக்கல்லாரில் 38 மில்லி மீட்டா் மழை பெய்தது.
சின்கோனா-26, வால்பாறை-6, சோலையாறு-2, பி.என்.பாளையம்-18, தொண்டாமுத்தூா் பிடிஓ அலுவலகம்-7, சிறுவாணி அடிவாரம்-12, அன்னூா்-6.20, போத்தனூா் ரயில் நிலையம்-4.20, பொள்ளாச்சி வட்டாட்சியா் அலுவலகம்-3, மேட்டுப்பாளையம், கோவை தெற்கு வட்டம், கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளில் தலா 1.







