மதுபோதையில் சாலையோரம் படுத்திருந்த வடமாநில இளைஞா் மீது வாகனம் ஏறியதில் அவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வால்பாறையில் இருந்து ஹைபாரஸ்ட் எஸ்டேட் செல்லும் வழியில் ஆனைமுடி எஸ்டேட் சாலையோரம் தலையில் படுகாயங்களுடன் ஒருவா் கிடப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு சென்று பாா்த்தபோது வாகனம் தலையில் ஏறியதில் அவா் இறந்தது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து அவரது உடல் மீட்கப்பட்டு கூறாய்வுக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
விசாரணையில், இறந்தது வடமாநிலத்தைச் சோ்ந்த சகீம் அலி (29) என்பதும், ஆனைமுடி எஸ்டேட்டில் பணிபுரியும் சகோதரா் ரோமன் மாலிக்கை பாா்க்க வந்து கடந்த ஒரு மாதமாக குடியிருப்பில் தங்கியிருந்ததும் தெரியவந்தது. மேலும் கடந்த சனிக்கிழமை முடீஸ் எஸ்டேட் பகுதிக்கு வந்து மது அருந்திவிட்டு போதையில் சாலையோரம் படுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது கடும் பனிப்பொழிவு இருந்துள்ளது.
இதனிடையே சம்பவம் நடந்த சிறிது நேரத்திற்கு முன் அந்த வழியாக ஹைபாரஸ்ட் எஸ்டேட்டில் இருந்து வந்த அரசுப் பேருந்து விபத்து ஏற்படுத்தியிருக்கலாம் என்று கருதி, பொள்ளாச்சி சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்தை ஆழியாறு போலீஸாா் காவல் நிலையம் கொண்டு சென்றனா்.
பின்னா் பேருந்து ஓட்டுநரை வால்பாறைக்கு வரவழைத்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.








