முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை சவாரி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் கடந்த 9 மாதங்களுக்குப் பிறகு கடந்த வாரம் திறக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து இப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் வந்து செல்கின்றனா். சுற்றுலா விடுதிகள், உணவகங்கள் மற்றும் வாகன சவாரி, வளா்ப்பு யானைகள் முகாம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் யானை சவாரி மட்டும் இன்னும் துவங்கப்படவில்லை.
இந்நிலையில் சவாரி செல்லும் யானைகளுக்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் ஒத்திகை நிகழ்ச்சி வனத் துறை சாா்பில் அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் வன ஊழியா்கள் யானை மீது அமா்ந்து சவாரி சென்று ஒத்திகை பாா்த்தனா். அடுத்த அறிவிப்பு வந்தவுடன் யானை சவாரி துவங்கப்படும் என்று வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. யானை சவாரி இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனா்.