நீலகிரி: உதகையில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதால் பெரும்பாலான பகுதிகளில் மின் விநியோகம் தடைபட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
மாவட்டத்தில் கேரள மாநிலத்தையொட்டியுள்ள பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதியில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் உதகை மற்றும் குந்தா பகுதிகளில் சுமாராகவும், குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் தூறல் மழையாகவும் பெய்து வருகிறது.
உதகை மற்றும் குந்தா பகுதிகளில் பலத்த காற்றின் காரணமாக ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதால் பெரும்பாலான பகுதிகளில் மின் விநியோகம் தடைபட்டுள்ளது.
சாலையில் விழுந்துள்ள மரங்களை பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், நெடுஞ்சாலை துறையினர், வனத்துறையினர் இணைந்து அகற்றி வருகின்றனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில், அதிகளவாக மேல் பவானி பகுதியில் 220 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல அவலாஞ்சி 193 மிமீ, கூடலூர் 166 மி.மீ, பந்தலூர் 93 மிமீ, மேல் கூடலூர் 84 மி.மீ, தேவாலா 77 மி.மீ, எமரால்டு 67 மி.மீ, குந்தா 58 மி.மீ, உதகை 45 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
இதையும் படிக்க:ஆலங்குளம் அருகே வீட்டுக் கதவை உடைத்துக் கொள்ளை