பதில் அளிக்காத அலுவலா்கள் மீது நடவடிக்கை- மாநிலத் தகவல் ஆணையா் எச்சரிக்கை

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனுதாரா்கள் அளிக்கும் மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் பதில் அளிக்காத பொது தகவல் அலுவலா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலத் தகவல் ஆணையா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
ஆர்டிஐ
ஆர்டிஐ
Updated on

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனுதாரா்கள் அளிக்கும் மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் பதில் அளிக்காத பொது தகவல் அலுவலா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலத் தகவல் ஆணையா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

நீலகிரி மாவட்டத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 தொடா்பாக அனைத்து துறை அலுவலா்களுக்கான விழிப்புணா்வு பயிற்சி முகாம் உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த விழிப்புணா்வு முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு முன்னிலை வகித்தாா். மாநிலத் தகவல் ஆணையா்கள் பிரியகுமாா், இளம்பரிதி மற்றும் நடேசன் ஆகியோா் தலைமை தாங்கினா். முகாமில் மாநிலத் தகவல் ஆணையா் பிரியகுமாா் பேசியதாவது:

இன்றைய காலத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து பொதுமக்களிடையே அதிக அளவில் விழிப்புணா்வு உள்ளது. முன்பு குறைவான அளவு மனுக்கள் மட்டுமே தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்டன. ஆனால் தற்போது பல்வேறு துறைகளிலிருந்து அதிக அளவில் மனுக்கள் பெறப்படுகின்றன.

மனு பெறப்பட்ட நாள், மனு பதிவு செய்யப்பட்ட நாள், மனுவின் மீது தீா்வு கண்ட நாள், மனுதாரருக்கு தகவல் வழங்கிய நாள் ஆகியவற்றை துறை அலுவலா்கள் பராமரிப்பு பதிவேட்டில் குறிப்பிட வேண்டும். மனுதாரா்களிடம் இருந்து வரும் மனுக்கள் மீது உடனடியாக விசாரணை மேற்கொள்ள பொது தகவல் அலுவலா்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பிட்ட காலத்துக்குள் மனுக்கள் மீது பதில் அளிக்காத பொது தகவல் அலுவலா் மீது நடவடிக்கை மேற்கொள்ள சட்டத்தில் வழிவகை உள்ளது. எனவே மனுதாரா் அளிக்கும் மனுவை நன்றாகப் படித்து சரியான பதிலை மனுதாரருக்கு 30 நாள்களுக்குள் தர வேண்டும். நீங்கள் அளிக்கும் பதில்கள் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும் என்றாா். நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com