திருப்பூரில் செல்லிடப்பேசியை பறித்துச் சென்ற இளைஞரைக் குத்திக் கொலை செய்த வடமாநில இளைஞரை காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(33). இவர், கடந்த 2016ஆம் ஆண்டு முதல் திருப்பூர் மாநகரப் பகுதியில் கட்டிட வேலை, சமையல் வேலைக்குச் சென்று வந்துள்ளார். மேலும், இரவு நேரங்களில் சாலையோரங்களில் படுத்து உறங்குவதை வழக்கமாகக் கொண்ட சீனிவாசன் பல்வேறு குற்றச்சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவர் மீது திருப்பூர் மாநகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கஞ்சா, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தினேஷ்குமார்(25) என்பவர் தனது உறவினரான 16 வயது சிறுவனுடன் திருப்பூர், தென்னம்பாளையம் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை 1.30 மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த சீனிவாசன் கத்தியைக் காட்டி தினேஷ்குமாரின் செல்லிடப்பேசியை பறித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், சீனிவாசனிடம் இருந்த கத்தியைப் பிடிங்கிய தினேஷ்குமார் அவரைக் குத்தியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த சீனிவாசன் சில நிமிடங்களில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்பூர் தெற்கு காவல் துறையினர் சீனிவாசனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தக் கொலையில் தலைமறைவாக இருந்த தினேஷ்குமாரை, காவல் துறையினர் திங்கள்கிழமை பிற்பகல் 12 மணி அளவில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.