தாராபுரம் அருகே அரசுப் பேருந்துகள் மோதயதில் ஓட்டுநர், நடத்துநர்
சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே ஒட்டன்சத்திரம் செல்லும் சாலையில் சாலக்கடை பகுதி அருகே மேம்பாலத்தில், திருப்பூரில் இருந்து போடிநாயக்கனூர் நோக்கி ஞாயிற்றுக்கிழமை இரவு சென்ற அரசுப் பேருந்து பழுதடைந்து நின்றது. இதையடுத்து பேருந்தின் ஓட்டுநர் பாலகண்ணன் (46), நடத்துநர் முருகேசன் (58) இருவரும் பேருந்தின் அடிப்பகுதியில் அமர்ந்து, பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சத்தியமங்கலத்தில் இருந்து செங்கோட்டை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 11.50 மணியளவில், தனக்கு முன்னால் சென்ற நெடுஞ்சாலைத்துறை ரோந்து வாகனத்தின் மீது எதிர்பாராதவிதமாக மோதி, பின் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் நின்றிருந்த அரசுப் பேருந்தின் மீதும் மோதியது.
இதையும் படிக்க- திருவாரூரில் பிப்.22 வரை ட்ரோன் பறக்கத் தடை!
இந்த விபத்தில் அரசுப் பேருந்தின் கீழ் அமர்ந்து பழுது நீக்கிக் கொண்டிருந்த ஓட்டுநர் பாலகண்ணன், நடத்துநர் முருகேசன் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தகவல் அறிந்து உடனடியாக விரைந்து வந்த மூலனூர் போலீசார் சடலங்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து சம்பவம் குறித்து மூலனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.