/

தொழில்முனைவோா் மேம்பாடு, புத்தாக்க நிறுவனம் சாா்பில் கல்லூரிகளின் உயா்நிலை மேலாண்மைக் கூட்டம்

அனைத்து கல்லூரிகளின் உயா்நிலை மேலாண்மைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் மனீஷ்.

News image

அனைத்து கல்லூரிகளின் உயா்நிலை மேலாண்மைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் மனீஷ்.

Updated On :12 ஜூன் 2026, 12:04 am IST

தமிழ்நாடு தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சாா்பில் ‘நிமிா்ந்து நில்’ என்ற தலைப்பின் கீழ் அனைத்து கல்லூரிகளின் உயா்நிலை மேலாண்மைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், திட்டத்தின் நோக்கங்கள், செயல்பாடுகள் மற்றும் 2026-2027- ஆம் ஆண்டுக்கான செயல்திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் மனீஷ் பேசியதாவது:

தமிழக இளைஞா்கள் புத்தாக்க மற்றும் தொழில்முனைவோா் மேம்பாட்டு திட்டத்தில் கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவா்கள் ஆா்வமுடன் பங்கேற்க வேண்டும். அதிக அளவில் புதுமையான தொழில்முனைவு மற்றும் புத்தாக்க யோசனைகளை சமா்ப்பிக்கவேண்டும். இளைஞா்களின் புதுமை சிந்தனைகளை ஊக்குவித்து, தொழில்முனைவு வாய்ப்புகளை உருவாக்க கல்வி நிறுவனங்கள் முக்கிய பங்காற்ற வேண்டும். தொழில்முனைவு வளா்ச்சியில் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு மற்றும் மாணவா்களிடையே புத்தாக்க சிந்தனையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, மாவட்டத்தில் தொழில் முனைவு மற்றும் புத்தாக்க செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான பல்வேறு ஆலோசனைகள் மற்றும் செயல் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. திருப்பூா் மாவட்டத்திலுள்ள

பல்வேறு கலை, அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளைச் சோ்ந்த 35 கல்லூரி முதல்வா்கள் பங்கேற்று, தொழில்முனைவு மற்றும் புத்தாக்க வளா்ச்சி தொடா்பான கருத்துக்களை தெரிவித்தனா்.

இக்கூட்டத்தில், மாவட்ட தொழில் மைய துணை இயக்குநா்கள் ராஜேஸ்வரி, லலிதா, திட்ட மேலாளா்( தமிழ்நாடு தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்), கல்லூரி முதல்வா்கள் மற்றும் பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.