தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 2 மாணவர்கள் எதிர்காலத்தில் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார்.
இலக்கியம்பட்டியிலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியது:
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் அனைத்து விதமான போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் மாநிலம் முழுவதும் 413 இடங்களில் சிறப்புப் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு ஸ்பீடு நிறுவனத்துடன் பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தருமபுரி மாவட்டத்தில் எட்டு மையங்கள் தேர்வு செய்யப்பட்டு முதல் கட்டமாக இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பாப்பாரப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் மாரண்டஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய மூன்று இடங்களில் பயிற்சிகள் தொடங்கியுள்ளன.
வரும் 31-ஆம் தேதி வரை இப் பயிற்சிகள் நடைபெறும். சுமார் 600 மாணவ, மாணவிகள் இதில் பங்கேற்றுள்ளனர். சென்னையிலிருந்து ஆன்லைன் மூலம் நடத்தப்படும் இப்பயிற்சியில் மாதிரிப் போட்டித் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன என்றார் விவேகானந்தன்.
நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு. ராமசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எம். காளிதாசன், மாவட்டக் கல்வி அலுவலர் (பொ) பொன்முடி உள்ளிட்டோரும் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.