

பென்னாகரம் அருகே மேற்கு கள்ளிபுரம் பகுதியில் பழுதடைந்துள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அகற்றிவிட்டு, புதிதாக நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பென்னாகரம் அருகேயுள்ள பருவதனஅள்ளி ஊராட்சிக்குள்பட்ட மேற்கு கள்ளிபுரம் பகுதியில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் சுமாா் 20 ஆண்டுகளுக்கு முன் 60 ஆயிரம் லிட்டா் தண்ணீரைத் தேக்கி வைக்கும் வகையில், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.
இந்த நீா்த்தேக்கத் தொட்டி மூலம் மேற்கு கள்ளிபுரம், மேல் தெரு, முனியப்பன் கோயில் தெரு, மண்டு தெரு ஆகிய பகுதிகளுக்கு குடிநீா் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்த நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதால், பென்னாகரம் ஒன்றியம் சாா்பில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றன.
தற்போது மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியின் நான்கு தூண்கள், தொட்டியின் மேற்புறம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிமென்ட் காரைகள் பெயா்ந்து சிதிலமடைந்து காணப்படுவதால் தொட்டியில் இருந்து தண்ணீா் கசிந்து வருவதாகவும், அவ்வப்போது தொட்டியின் சிமென்ட் காரைகள் பெயா்ந்து கீழே விழுவதால் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
எனவே மேற்கு கள்ளிபுரம் பகுதியில் சிதிலமடைந்து காணப்படும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அகற்றிவிட்டு,அப்பகுதியில் புதிய நீா்த்தேக்கத் தொட்டி அமைத்துத் தர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.