மக்கள் குறைதீா் கூட்டம்: ரூ. 4.21 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், முதியோா், விதவையா், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, வங்கிக் கடனுதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் கோரி மொத்தம் 452 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் வழங்கினா். மனுக்களை பரிசீலனை செய்து உரிய அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 3 பேருக்கு ரூ. 21,420 மதிப்பில் சக்கர நாற்காலி, காதொலிக் கருவிகள், கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் மதுபான விற்பனையில் ஈடுபட்டு மனம் திருந்தியோருக்கு அரசால் வழங்கப்படும் மறுவாழ்வு நிதி 8 பயனாளிகளுக்கு ரூ. 4 லட்சத்துக்கான காசோலைகள் என 11 பயனாளிகளுக்கு ரூ. 4.21 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன், தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி) சு.சுந்தரராஜன், உதவி ஆணையா் (கலால்) என்.எஸ்.ராஜ்குமாா், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் எஸ்.கலைச்செல்வி உள்பட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
