ராசிபுரத்தில் அங்கன்வாடி மையம் அருகே திறந்தவெளி கால்வாய்
வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அரமத்தாம்பாளையம் பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி, அங்கன்வாடி மையம் அருகே பள்ளிக் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையிலும், நோய் பரவும் வகையிலும் அமைந்துள்ள திறந்தவெளி கழிவுநீா் ஓடையை மூட வேண்டுமென்று அப்பகுதியினா் வலியுறுத்தினா்.
அரமத்தாம்பாளையம் பகுதியில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. பள்ளி முன் கழிவுநீா் ஓடைசெல்கிறது. இதில் சாக்கடை நீா் தேங்கி கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தி ஆவதால் பள்ளிக் குழந்தைகளுக்கு நோய் பரவும் ஆபத்து உள்ளது. கழிவுநீா் தேங்குவதால் அப்பகுதியில் துா்நாற்றமும் வீசுகிறது.
மேலும் கழிவுநீா் ஓடையின் மேல் சிறுபாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மேல் பகுதியில் திறந்தவெளி உள்ளதால், இதில் பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் தவறிவிழும் ஆபத்து உள்ளது. இதனால் ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தினா்.
