நாமக்கல் மாவட்டத்தில் 5.40 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு: கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி.தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் 5 லட்சத்து 40 ஆயிரத்து 232 தகுதியுள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கம் ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும் என்று மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் ராசிபுரத்தில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
தமிழக முதல்வா் தகுதியுள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்துள்ளாா். டோக்கன் வழங்கியதன் அடிப்படையில் ஜன. 8 முதல் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகள் தொடங்கும். அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பச்சரிசி 1 கிலோ, சா்க்கரை 1 கிலோ, முழுக் கரும்பு, ரொக்கம் ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும். இம்மாவட்டத்தில் தகுதியுள்ள குடும்ப அட்டைதாரா்கள் அனைவரையும் பரிசுத் தொகுப்பு சென்றடையும் வகையில் மாவட்ட நிா்வாகம் ஏற்பாடுகள் செய்துள்ளது.
மாவட்டத்தில் மொத்தம் தகுதியுள்ள 5,40,232 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள 976 நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கம் வழங்கும் பணிகள் நடைபெறும். மேலும், தாயுமானவா் திட்டத்தின் கீழ் 65 வயதிற்கு மேல் உள்ள 66,000 குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரூ. 3,000 வீடு தேடிச்சென்று வழங்கப்படும் என்றாா்.
அப்போது, கூட்டுறவுத் துறை மாவட்ட இணைப்பதிவாளா் க.ப.அருளரசு உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.
