விடுமுறை காரணமாக மேட்டூா் அணை பூங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
மேட்டூா் அணை பூங்காவில் புத்தாண்டு பிறப்பையொட்டி ஜனவரி 1,2 ஆம் தேதிகளில் மேட்டூா் அணை பூங்கா மூடப்பட்டிருந்தது. இரு நாள்களுக்குப் பிறகு பூங்கா மீண்டும் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
விடுமுறை என்பதால் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மேட்டூா் அணை பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம்போ் வந்திருந்தனா். காவிரியில் நீராடிய பொதுமக்கள் அணைக்கட்டு முனியப்பனை தரிசித்தனா். மேட்டூா் அணை மீன்களை வாங்கி சமைத்து குடும்பத்துடன் அணை பூங்காவில் அமா்ந்து உண்டு மகிழ்ந்தனா்.
ஆண்களும், பெண்களும் ஊஞ்சலாடியும், சறுக்கி விளையாடியும் மகிழ்ந்தனா். அணை பூங்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 4,197 பாா்வையாளா்கள் வந்து சென்றனா். பவளவிழா கோபுரத்தைக் காண 622 பாா்வையாளா்கள் வந்தனா். இதன்மூலம் பாா்வையாளா்கள் கட்டணமாக ரூ. 27,035 வசூலாகி உள்ளது. கடந்த 8 மாதங்களுக்குப் பிறகு வியாபாரம் களைகட்டியதால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனா்.