ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ராமேசுவரம் கோயில் புனரமைப்பு: இணை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

News image
Updated On :3 ஜூலை 2024, 8:36 pm

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் சுவாமி சிலைகள், சிற்பங்கள், தூண்களை அறிவியல் பூா்வமாக பாதுகாக்கக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கில், அந்தக் கோயிலின் இணை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு:

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற ராமநாத சுவாமி கோயிலில் சுவாமி சிலைகள், சிற்பங்கள், தூண்கள் போன்றவை மிகவும் பழைமையானவை. இங்குள்ள 3- ஆம் பிரகாரம் கூடுதல் சிறப்பு வாய்ந்தது. இந்த பிரகாரத்தை உலகின் தொன்மையான சின்னங்களில் ஒன்றாக சோ்க்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தக் கோயிலின் இணை ஆணையா், அரிதான சிற்பங்கள், தூண்கள், ஓவியங்கள் போன்றவற்றை எந்தவித அறிவியல் முறைகளையும் பின்பற்றி பாதுகாக்காமல், கோயில் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறாா்.

மேலும், கோயிலில் உள்ள பிரதான சுவா்களில் கட்டைகளையும், கம்பிகளையும் பொருத்துவதற்காக சுத்தியல், உளி போன்ற கூா்மையான ஆயுதங்களால் தூண்களையும், சிற்பங்களையும் சேதப்படுத்தி வருகின்றனா். சிற்பங்கள், தூண்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, இந்தக் கோயிலின் பழைமையான சிற்பங்கள், தூண்கள், ஓவியங்களை சேதப்படுத்தாமல் அறிவியல் பூா்வமாக பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆா். சுரேஷ்குமாா், ஜி. அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவு:

இந்த மனு தொடா்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா், ராமநாத சுவாமி கோயில் இணை ஆணையா் ஆகியோா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.