நடிகர் ரஜினிகாந்தின் கருத்து ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளரின் குரலை பிரதிபலிக்கிறது: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு

தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ள கருத்து ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளரின் குரலை பிரதிபலிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்
Updated on
1 min read

தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ள கருத்து ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளரின் குரலை பிரதிபலிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில் கடந்த மே 28ஆம் தேதி நடந்த தாக்குதலில் மூவர் கொலை செய்யப்பட்டனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த மூவர் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு திங்கள்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: கச்சநத்தம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பல வீடுகளில் பட்டதாரிகளும் உள்ளனர். இது அதே பகுதியில் உள்ள மற்றொரு சமூகத்தினருக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர்கள் அடிக்கடி இடையூறு செய்து வந்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. தற்போது வரை கச்சநத்தம் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். எனவே தாக்குதலில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து அவருக்கே தெளிவில்லாததை காட்டுகிறது. நடிகர் ரஜினிகாந்தின் குரல் ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளரின் குரலை பிரதிபலிக்கிறது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு போராட்டக்காரர்களை குறிவைத்து நடத்தப்பட்ட கொலை தாக்குதல். துப்பாக்கிச் சூடு நடத்த துணை வட்டாட்சியர் உத்தரவிட்டதாக அரசு தெரிவிக்கிறது. ஆனால் அதை துணை வட்டாட்சியர் மறுக்கிறார். இது அரசின் நிர்வாகச் சீர்கேட்டையே காட்டுகிறது என்றார். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் குணசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலர் கண்ணகி, மதுரை புறநகர் மாவட்டச் செயலர் காளிதாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மானாமதுரையில்...
திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தில் கோயில் திருவிழாவில் முதல் மரியாதை தொடர்பாக இருபிரிவினரிடையே ஏற்பட்டமோதலில் கொல்லப்பட்ட மூவரின் வீடுகளுக்கும் திங்கள்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com