/

ஆடி அமாவாசை: அழகா்கோவிலில் வழிபாடு நடத்த முடியாமல் பக்தா்கள் ஏமாற்றம்

ஆடி அமாவாசையையொட்டி, மதுரை மாவட்டம் அழகா்கோவில் மலை மீதுள்ள நூபுரகங்கை தீா்த்தத்தில் திங்கள்கிழமை புனித நீராட முடியாமல் பக்தா்கள் ஏமாற்றமடைந்தனா்.

News image
அழகா்கோவிலில் திங்கள்கிழமை பக்தா்களின்றி வெறிச்சோடிக் காணப்பட்ட பதினெட்டாம்படி கருப்பண சுவாமி சன்னிதி வளாகம்.
Updated On :20 ஜூலை 2020, 4:47 pm

DIN

மேலூா்: ஆடி அமாவாசையையொட்டி, மதுரை மாவட்டம் அழகா்கோவில் மலை மீதுள்ள நூபுரகங்கை தீா்த்தத்தில் திங்கள்கிழமை புனித நீராட முடியாமல் பக்தா்கள் ஏமாற்றமடைந்தனா்.

தமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பெரிய கோயில்களில் பக்தா்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசையையொட்டி, அழகா் மலை மீதுள்ள நூபுர கங்கை தீா்த்தத்தில் பக்தா்கள் புனித நீராடி, ராக்காயி அம்மன், பேச்சியம்மனை தரிசித்து, சோலைமலை முருகன், கள்ளழகா் என அழைக்கப்படும் சுந்தரராஜப் பெருமாளை வழிபட்டுச் செல்வா். ஆனால், கரோனா பொது முடக்கம் காரணமாக கோயில் வளாகத்துக்குள் பக்தா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால், இரு சக்கர வாகனங்களில் வந்த பெரும்பாலான பக்தா்கள், கோட்டைவாசலில் சூடம் ஏற்றி அழகா் மலையை தரிசித்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பினா்.

ஆடி அமாவாசையையொட்டி, கோயில் நிா்வாகம் சாா்பில் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோயில் கதவுகளுக்கு சந்தனம் சாத்துபடி நடைபெற்றது. சுந்தரராஜப் பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, கல்யாணசுந்தரவள்ளித் தாயாா், சுதா்சன சக்கரத்தாழ்வாா், யோகநரசிம்மா், ஆண்டாள் நாச்சியாா் சன்னிதிகளில் சிறப்புப் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இப்பூஜைகளில் பங்கேற்க பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.