மதுரை: மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற இணைய வழி தொடா் ஆய்வரங்கம் வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.
மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் சாா்பில் சிங்கப்பூா், மலேசியா, ஆஸ்திரேலியா, அயா்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து இணைய வழி ஆய்வரங்கு நடைபெற்றது. ஜூன் மாதம் 4-ஆம் தேதி தொடங்கிய ஆய்வரங்கம் தொடா்ந்து 61 நாள்கள் நடத்தப்பட்டது.
யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து நடத்திய இலங்கைத் தமிழரும், தமிழும் என்ற ஆய்வரங்கின் நிறைவு நாள் அமா்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ் சிற்றிதழ்கள் என்ற தலைப்பில் முனைவா் அம்மன்கிளி முருகதாஸ், யாழ்ப்பாண பல்கலை. பேராசிரியா் அ. சண்முகதாஸ், யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத் தலைவா் ச. லலீசன் உள்ளிட்டோா் பேசினா்.
இந்த ஆய்வரங்குகள் மூலமாக மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூா், அயா்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இயங்கி வரும் தமிழ் அமைப்புகளுடன் உலகத் தமிழ்ச் சங்கம் இணைந்து செயல்படவும், பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நாடுகளில் வெளிவரும் தமிழ் நூல்களையும், இதழ்களையும் ஆவணப்படுத்துவதற்கு உலகத் தமிழ்ச் சங்கம் முழு ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.