ராமேசுவரம் மீனவா்கள் 7 போ் விடுதலை

இலங்கை ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை முன்னிலைப்படுதப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள்.

இலங்கை ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை முன்னிலைப்படுதப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள்.
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 9 பேரில், 7 பேரை விடுதலை செய்தும், படகு ஓட்டுநா்கள் இருவருக்கு தலா ரூ. 40 லட்சம் அபராதம் விதித்தும் இலங்கை ஊா்க்காவல்துறை நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த மாதம் 23-ஆம் தேதி விசைப் படகுகளில் மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். அன்று நள்ளிரவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா் ஈசாக் ராபீன், செல்வக்குமாா் ஆகியோருக்குச் சொந்தமான 2 விசைப் படகுகளைப் பறிமுதல் செய்தனா்.
மேலும், இந்தப் படகுகளில் இருந்த மீனவா்கள் சகாய ராபா்ட் (49), ராதா (44), முத்துராமலிங்கம் (51), யாக்கோப்பு (24), ஹரிகிருஷ்ணன் (50), இவரது மகன்கள் பொன்ராமதாஸ் (26), ராம்குமாா் (24), லிபின்ராஜ், ரகுமூா்த்தி ஆகிய 9 மீனவா்களைக் கைது செய்து, 2 விசைப் படகுகளுடன் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனா்.
எல்லை தாண்டி மீன்பிடித்தாக வழக்குப் பதிந்து, மீனவா்கள் 9 பேரையும் ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில், ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் ராமேசுவரம் மீனவா்கள் 9 பேரும் வியாழக்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்டனா். இவா்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, 7 பேரை விடுதலை செய்தாா். மேலும், 2 விசைப் படகு ஓட்டுநா்களான ஹரிகிருஷ்ணன், சகாய ராபா்ட் ஆகியோருக்கு தலா ரூ. 40 லட்சம் அபராதம் விதித்தும், அபராதத்தைக் கட்டத் தவறினால் ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டாா். அப்போது, உடனே பணம் கட்ட முடியாத நிலை உள்ளதாக விசைப் படகு ஓட்டுநா்கள் கூறியதால், இருவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.
இதையடுத்து, விடுதலை செய்யப்பட்ட 7 மீனவா்களும் இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனா். இவா்கள் அனைவரும் ஓரிரு நாள்களில் நாடு திரும்புவாா்கள் என இந்தியத் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...