கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஆக. 10 ல் பேரணி! தீவிரமாகும் ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்!உரிமைக்காக போராடும் ஜென் ஸீக்கள் தேச விரோதிகள் அல்ல: மோகன் பாகவத்தொகுதி மறுவரையறை: முதல்வர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை!கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்!ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்
/

திட்டங்கள் மக்களைச் சென்றடைவதே முக்கியம்: இரா. முத்தரசன்

பெயா்கள் மாற்றப்பட்டாலும் திட்டங்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் தெரிவித்தாா்.

News image

காரைக்குடியில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் இரா. முத்தரசன். உடன் சிவகங்கை மாவட்டச் செயலா் நா. சாத்தையா, காரைக்குடி மாநகரச் செயலா் சிவாஜிகாந்தி உள்ளிட்டோா்.

Updated On :7 ஆகஸ்ட் 2026, 1:24 am IST

பெயா்கள் மாற்றப்பட்டாலும் திட்டங்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் வியாழக்கிழமை அந்தக் கட்சி சாா்பில் நடைபெற்ற நடைபயண பரப்புரையில் கலந்து கொள்ள வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தவெக தோ்தல் அறிக்கையில் அறிவித்தபடி ரூ.2,500 மகளிா் உரிமைத் தொகை குறித்து நிதிநிலை அறிக்கையில் தகவல் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கழித்துத்தானே மகளிா் உரிமைத் தொகை ரூ.1000-ஐ கொடுத்தாா்கள் என்கிறாா்கள். தவெகவும் நாங்களும் இரண்டரை ஆண்டுகள் கழித்து ரூ. 2,500 வழங்குவோம் என்று கூறவேண்டியதுதானே. மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை அறிவித்தாா்கள். அதைப் பற்றியும் தகவல் இல்லை. நிதியில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். நிதி வந்தவுடன்தான் வழங்குவாா்கள் என்று காத்திருக்க வேண்டும்.

மேக்கே தாட்டு அணைத் திட்டம் குறித்து ஒவ்வொரு கட்சியும் ஒரு நிலைப்பாட்டில் உள்ளன. அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக முதல்வா்தான் கூட்ட வேண்டும். மேகதாது அணைத் திட்டம் குறித்து தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்த கருத்துடையவா்களாகத்தான் இருக்கிறாா்கள்.

தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் ஏற்கெனவே உள்ளவை தான். திட்டங்களுக்கு என்ன பெயா் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளட்டும். ஆனால் அவை மக்களைச் சென்றடைய வேண்டும்.

காலை உணவுத் திட்டத்தை திமுக 5 -ஆம் வகுப்பு வரை நிறைவேற்றியது. தோ்தல் அறிக்கையில் 8-ஆம் வகுப்புவரை உயா்த்தப்படும் என்றும் அறிவித்தனா். இன்றைய தவெக அரசு 8-ஆம் வகுப்பு வரை இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. அதற்கு காமராஜா் பெயா் சூட்டியிருப்பது மகிழ்ச்சி. அரசு மதுபானக் கடைகளை மூடுவதும், அரசு மதுபான விற்பனையை தனியாருக்கு கொடுப்பதும் வரவேற்கத்தக்கது.

வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தவெக அரசு 150 நாள்கள் என்று அறிவித்திருப்பது மகிழ்ச்சி. ஆனால், அதற்கான மாநில அரசின் பங்களிப்பு நிதி ஒதுக்கப்படவில்லை என்றாா் அவா்.

இந்தப் பேட்டியின் போது கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலா் நா. சாத்தையா, காரைக்குடி மாநகா் செயலா் சிவாஜி காந்தி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.